இந்தி பாசம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு முன்பாக அமித்ஷாவுக்கு முதல் எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார்.

எங்கே இந்தி?: இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?
அமித்ஷாவுக்கு எச்சரிக்கை: நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
"இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.
— Udhay (@Udhaystalin) September 14, 2023
தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில்…
சனாதன ஒழிப்பு சர்ச்சை: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு முதலில் மத்திய அமைச்சர் அமித்ஷாதான் பதில் கொடுத்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிப்பது பற்றி பேசினார். இத்தகைய பேச்சுகள் இந்து மதம், கலாசாரத்தை வெறுப்பதையே காட்டுகிறது. இது இந்து மதம், கலாசாரம் மீதான தாக்குதல். இது அரசியல் ஓட்டுகளுக்கான பேச்சு என சாடியிருந்தார்.
உடனடி பதிலடி கொடுத்த உதயநிதி: தற்போது இந்தி திணிப்பு பிரச்சனையில் அமித்ஷாவுக்கு உதயநிதி முதல் பதிலடி கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுவாக இத்தகைய விவகாரங்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் நேரடியாக மத்திய அமைச்சர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது வழக்கம். முதல் முறையாக முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரிந்து கட்டிக் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications