நீட் தேர்வு: லோக்சபாவில் கொதித்தெழுந்த எம்பிக்கள்! ராஜ்ய சபாவில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிய திமுக
சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக மக்களவையில் தமிழக எம்பிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க திமுக மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த குழு நீட் பாதிப்பு குறித்த தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதை எல்லாம் அடிப்படையாக வைத்தே திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் தயார் செய்திருந்தது. இந்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறக்கோரி மக்களவையில் தமிழக எம்பிகள் முழக்கமிட்டனர், ஆளுநரைத் திரும்பப் பெறுக என்றும் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தமிழக எம்பிகள் முழக்கமிட்டனர்
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கக்கோரி தமிழக எம்பிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி எம்பிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்,
இதற்கிடையே நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க திமுக மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. திமுக எம்.பி. திருச்சி சிவா இந்த ஒத்திவைப்பு நோட்டீஸை மாநிலங்களவை செயலரிடம் வழங்கினார்.
மாநிலங்களவை அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications