நாய்க்கறி என்பது வதந்தி.. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கண்டனம்
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்டது ஆட்டுக்கறிதான் என்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. வதந்தி பரப்பப்படுவதாக கண்டனங்களையும் தெரிவித்துள்ளது அந்த அமைப்பு.
சென்னை எழும்பூரில் கடந்த சனிக்கிழமை, பல பாக்ஸ்களில் அடைத்து வரப்பட்ட 2000 கிலோ எடை கொண்ட இறைச்சிகள் பறிமுதல் செய்யபபட்டன. அவை நாய் கறி என கூறி அதிகாரிகள் அழித்துவிட்டனர்.
ஆனால், அவை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆட்டுக்கறி என்று ஷகிலா பானு என்பவர் தெரிவித்தார். அந்த இறைச்சி தங்களுக்கு திரும்பி வர வேண்டும் என்று கூறினார்.

தனிப்படை
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைக்காத நிலையில், அந்த இறைச்சியின் பின்புலம் குறித்து ஆய்வு செய்ய சப்இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தான் விரைந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெள்ளாடுகள்
ராஜஸ்தானில் காணப்படும் வெள்ளாடுகளின் வால்கள் ஓர் அடி வரையில் வளரக்கூடியவை. தமிழகத்தில் உள்ள ஆடுகளின் வால் மிகவும் சிறியதாக இருக்கும். விலை குறைவு என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்த நீளமான வால்களை உடைய ஆட்டு இறைச்சியை இங்குள்ள வியாபாரிகள் வாங்குவது வழக்கம்.

வதந்தி
ரயில்வே அதிகாரிகள் இந்த இறைச்சியைப் பார்த்துவிட்டு, எந்த ஆய்வும் செய்யாமல் நாய்க்கறி என்று வதந்தி பரப்பியுள்ளனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இந்த வதந்தி பரவியதன் காரணமாக சென்னையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வோரும் பிரியாணி வியாபாரம் செய்வோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு
இதனால் இறைச்சி வியாபாரிகளும் ஹோட்டல் உரிமையாளர்களும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வதந்திக்குக் காரணமான ரயில்வே அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications