ரூ.40 லட்சம் வருமானம்.. தமிழக பானிபூரி வியாபாரி கனவுல கூட நினைக்காத சம்பவம்.. ஜிஎஸ்டி நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரிக்கு மத்திய அரசு சார்பில் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-2024 நிதி ஆண்டில் மட்டும் ரூ.40 லட்சத்துக்கு அவர் ஆன்லைனில் பணம் பெற்றிருந்த நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கு முந்தைய 3 ஆண்டுக்கான கணக்குகளுடன் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதோடு, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை சாலையோரம் சின்னதாக கடை வைத்து வியாபாரம் செய்வோருக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. குறிப்பாக சாலையோரம் பானிபூரி வியாபாரம் செய்வோருக்கு வரி என்பது கிடையாது.

இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் என்பது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 3 ஆண்டு கணக்கு ஆவணங்களை தாக்கல் செய்வதோடு, ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழகத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரி ஒருவர் தனது கடையில் போன்பே மற்றும் ரேஜர்பே உள்ளிட்டவற்றின் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று வந்தார். கடந்த 2023-2024ம் ஆண்டில் மட்டும் அவருக்கு ஆன்லைன் மூலம்மொத்தம் ரூ.40 லட்சத்து 11 ஆயிரத்து 19 கிடைத்துள்ளது.
இந்த பணம் முழுக்க முழுக்க ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் கிடைத்தது. பானிபூரி வியாபாரிக்கு ஒரேயாண்டில் ரூ.40 லட்சம் பணம் கிடைத்துள்ள நிலையில் அவருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் என்பது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் என்பது டிசம்பர் 17 ம் தேதியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 70வது பிரிவு மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு உரிய ஆவணங்களோடு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2023-2024 நிதியாண்டில் Razorpay மற்றும் Phonepe வழியாக மொ்ததம் ரூ.40,11,019 பெறப்பட்டுள்ளது. இதனால் 2021 -22, 2022-23, 2023-24 ஆகியஆண்டுகளின் கணக்கு ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும்.
மேலும் ஜிஎஸ்டி விதிகளின்படி ஒவ்வொரு நிதி ஆண்டின்போது ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோர் ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் ஜிஎஸ்டி பதிவை நீங்களும் பதிவு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி பதிவு செய்யாமல் இருக்கும்பட்சத்தில் தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவு 122 (1)(xi)ன்படி ரூ.10 ஆயிரம் அல்லது வரி பாக்கியில் 10 சதவீதம் ஆகியவற்றில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நோட்டீஸ் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications