பத்திரப்பதிவு.. மார்ச் 30ம் தேதி முக்கியமான நாளாச்சே.. தமிழக அரசுக்கு பறந்த முக்கியமான கோரிக்கை
சென்னை: 2023-24ம் நிதியாண்டின் கடைசி வேலை நாளான மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகப்படியான பத்திரப்பதிவு நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், வரும் சனிக்கிழமை அன்று அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களையும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு சட்டசபையில் நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசின் மொத்த வருவாயான ரூ.1.39 லட்சம் கோடியில் வணிக வரி, பதிவுத் துறை மூலமாக 84 சதவீதம் அதாவது, ரூ.1.19 லட்சம் கோடி கிடைக்கிறது. வணிக வரித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை காரணமாக முந்தைய ஆண்டை (2020-21) விட, இந்த ஆண்டு (2021-22) கூடுதலாக ரூ.8,760 கோடி கிடைத்தது. அதேபோல, பதிவுத் துறையிலும் கூடுதலாக ரூ.3,270 கோடி வந்தது.

பதிவுத் துறையில் தற்போது பதிவு செய்யப்படும் ஆவணப் பதிவில் 85 சதவீதம் அன்றைய தினமே பதிவு ஆவணங்கள் வழங்கப்படுகிறது. சார்-பதிவாளர் அலுவலகங்களில் குறுகிய அவகாசத்தில் ஆவணப் பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காக, ஆவணப் பதிவுக்கான முன்பதிவு டோக்கனை ரூ.5 ஆயிரம் கூடுதல் கட்டணம் பெற்று தத்கால் முறையில் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும். முதல்கட்டமாக, அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்-பதிவாளர் அலுவலகங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்..
அலுவலகங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக, விடுமுறை நாளில் பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். அன்று பதிவு பணிக்காக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும்" என்றார். அமைச்சர் மூர்த்தி அறிவித்தபடி சனிக்கிழமைகளில் சார் பதிவாளர் அலுவலகங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதேபோல் முக்கியமான சுபமுகூர்த்த நாட்களிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் 023-24ம் நிதியாண்டின் கடைசி வேலை நாளான மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகப்படியான பத்திரப்பதிவு நடைபெறும் வாய்ப்பு உள்ளது. வழக்கமாக நிதி ஆண்டு முடியும் மார்ச் 31ல் சனிக்கிழமையில் வந்தால், அந்த நாளில் சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம். இந்த முறை மார்ச் 31 ஞாயிறு என்பதால், மார்ச் 30ம் தேதியான சனிக்கிழமை அன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
அதாவது மொத்தம் உள்ள, 575ல், 100 சார் - பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படுகின்றன. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் மார்ச் 30ம் தேதி அன்று இயங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பதிவுத்துறை தலைவர் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும். இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் விரைவில் முடிவெடுப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏனெனில் மார்ச் 30 மற்றும் 31, ஏப்ரல் 1 என தொடர்ந்து 3 நாட்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அதேபோல் நிதியாண்டின் இறுதி நாட்கள் என்பதால் பலரும் பத்திரப்பதிவுக்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்.. ஒரு வேளை மார்ச் 30ல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படாமல் போனால், அரசுக்கு கணிசமான வருவாய் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications