இயக்குநர் மோகன் ஜியை கைது செய்த போலீஸ்.. உடனே ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம்
சென்னை : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தொடர்பான பேச்சுக்காக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து தனிப்படை காவலர்கள் மோகன் ஜியை கைது செய்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜியை திருச்சி நீதிமன்றம் ஜாமினில் விடுவித்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய இயக்குனர் மோகன் ஜி,"எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்." என பதிவிட்டிருந்தார்.
இதனிடையே பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியாக இயக்குர் மோகன்ஜி அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருச்சி காவல்துறை வெளியிட்ட பதிவில், "இந்து மதத்தினரையும், இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாக பேசிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரிந்து வரும் கவியரசு என்பவர், கொடுத்த புகாரில், கடந்த 21.09.2024-ஆம் தேதி மதியம் 01.00 அளவில் தான் பணியில் இருந்த போது, பக்தர்கள் சிலர் இந்து மதத்தையும், இந்து கோவில்களை பற்றியும் தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி அவர்கள் பேசியதாக பேசிக்கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து எனது செல்போனை பார்த்தபோது, தனியார் யூடியூப் வளைதளத்தில் "உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா என்ற தலைப்பில்" அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக, உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்து, கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும், தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைவ பொருட்களான மீன் எண்ணெய்யும், மாட்டு கொழுப்பும் கலந்து உள்ளதாக கூறப்படும் விவகாரம் அடங்குவதற்குள், தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொய்யான செய்தி பரப்பியதாக, தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, 39/24, த.பெ.குணசேகரன், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மேற்படி நபர் கைது செய்யப்பட்டு. நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போலீசார் அறிவித்தபடியே திருச்சி நீதிமன்றத்தில் இன்று மாலை இயக்குனர் மோகன் ஜி ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதி, இயக்குனர் மோகன் ஜியை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். இதனால் இயக்குனர் மோகன் ஜி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications