அங்குட்டுப் போய் விளையாடுங்கப்பா! திராவிட கோட்டைகளை சரிக்கும் விஜய்? மே-4 வரைக்குமே சஸ்பென்ஸ் தான்!
சென்னை: தமிழகத்தில் 17-வது சட்டசபையை ஆளப்போகும் கட்சி எது? அதற்கு அணிலாக இருக்கப் போகும் எம்.எல்.ஏ.க்கள் யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கியமான 2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரபரப்பு நீடித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிந்துவிட்டாலும், யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைக்க இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஆனால், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசம் மிகச் சிறியதாக இருக்கும் எனவும், அந்த வித்தியாசம் தவெகவின் வாக்குக்கு ஈடாக தான் இருக்கும் என்கின்றனர் தமிழக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த முறை நடைபெற்ற தேர்தலில், கடந்த 69 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது சட்டசபை தேர்தல் வரை இல்லாத வகையில், இந்த முறை சுமார் 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

2026 தமிழக தேர்தல்
அதிக வாக்குப்பதிவு என்பது பொதுவாக இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. ஒன்று, ஆளுங்கட்சியின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பது; மற்றொன்று, ஆளுங்கட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி இருப்பது. இதற்கு முன்பு அதிக வாக்குப்பதிவு நடந்த தேர்தல் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலாகும். அப்போது சுமார் 78.01 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அதிமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது என்பது அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும்.
நான்கு முனைப்போட்டி
இந்த முறை நடைபெற்ற தேர்தலில், கடந்த 2021 தேர்தலை ஒப்பிடும்போது 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், சுமார் 10 தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு சற்று குறைவாக இருந்துள்ளது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் 80 சதவீதத்தைத் தாண்டி, சில இடங்களில் 90 சதவீதத்தையும் தாண்டி வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகத்தில் இந்த முறை நான்கு முனைப்போட்டி நிலவியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
முக்கியமாக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இருப்பினும், நடைமுறையில் கடும் போட்டி முதல் மூன்று கட்சிகளுக்கு இடையேதான் இருந்ததாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேர்தல் களத்திற்கு புதிய சக்தியாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆகிய மூன்று தரப்புகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுவதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி போட்டியிட்டாலும், மிகப்பெரிய அளவில் முடிவை மாற்றும் தாக்கம் இருக்காது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த தேர்தலில் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாக்குகள் பல்வேறு கட்சிகளுக்கு சிதறியிருக்கலாம் என்ற மதிப்பீடும் முன்வைக்கப்படுகிறது. இதனால், 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றியை தீர்மானிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் சஸ்பென்ஸ்
இது தேர்தல் முடிவுகளை மேலும் சஸ்பென்ஸாக மாற்றியுள்ளது. இதனால் அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் இன்னும் தேர்தல் பரபரப்பிலிருந்து முழுமையாக வெளியே வர முடியாமல் காத்திருக்கின்றனர். மக்களும் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு வெளிவர இன்னும் மே 4-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருப்பதால், மாநிலம் முழுவதும் அரசியல் சஸ்பென்ஸ் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.














Click it and Unblock the Notifications