Egg Rate: 55 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு கோழி முட்டையின் விலை உயர்வு ஏன்? எப்போது குறையும்?
சென்னை: கோழி முட்டையின் விலை 55 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது ஏன் என்பது குறித்தும் விலை குறையுமா என்பது குறித்து தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 1300 கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வது போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
முட்டை விலை நிர்ணயம்
இந்த நிலையில் முட்டைக்கான கொள்முதல் விலையை நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) தினசரி அறிவித்து வருகிறது.
நாமக்கல் மண்டலம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.90 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நடந்த என்இசிசி கூட்டத்தில் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
ஒரு முட்டை விலை எவ்வளவு
இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ 5.95 காசுகளாக அதிகரித்திருந்தது. இந்த நிலையில் நேற்று முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ 6 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் 55 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு முட்டையின் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டை ரூ 7 முதல் 8 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கு வாங்க முடியவில்லை
இதனால் குழந்தைகளுக்கு முட்டை வாங்கிக் கொடுக்க சிரமமாக இருப்பதாக இல்லத்தரசிகள் கவலை தெரிவிக்கிறார்கள். ஏற்கெனவே விலைவாசி உயர்வு, தங்கம், வெள்ளி விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் இல்லத்தரசிகளை இந்த முட்டை விலையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
நாமக்கல் வரலாறு
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முட்டையின் கொள்முதல் விலை ரூ 5.50 காசுகளாக இருந்தது. நாமக்கல் வரலாற்றில் இதுதான் அதிகபட்சம் என கருதப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 2023 இல் ரூ 5.65 காசுகளாக முட்டை விலை உயர்ந்தது.
புதிய உச்சம்
இந்த நிலையில் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை கடந்த 6 நாட்களில் 30 காசுகள் அதிகரித்து 600 காசுகளாக இருக்கிறது. 55 ஆண்டுகால நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றிலேயே முதல்முறையாக முட்டை கொள்முதல் விலை அதிக உச்சத்தை தொட்டுள்ளது.
விலை உயர்வு ஏன்
இந்த முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் குளிர்காலம் இருப்பதால் முட்டையை அதிகம் உட்கொள்கிறார்கள். இதனால் முட்டை விலை உயர்ந்துள்ளது. இன்னும் கூட விலை உயரக் கூடும்.
எப்போது குறையும்
குளிர் காலம் முடியும் வரை விலை குறைய வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ஜனவரி, பிப்ரவரி வரை முட்டையின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் என்பது போல்தான் தெரிகிறது.












Click it and Unblock the Notifications