இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகமே இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் மின்சாரம் கிடைப்பது எப்படி? தற்போது நடப்பது மின்வெட்டா, இல்லை மின் திருட்டா என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும், குறிப்பாக இரவு நேரங்களில், தொடர்ச்சியாக நிகழும் மின்வெட்டுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைத்து கொண்டிருக்கின்றன.

Tamil Nadu Power Cut Controversy

கடும் வெப்பத்தால் தகிக்கும் இரவுகளில், குழந்தைகள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். முதியவர்கள் மூச்சுத் திணறலோடு இரவைக் கழிக்கின்றனர். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கனவுகள் இருளில் கரைகின்றன. சிறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

மின்சாரம் என்பது வெறும் வசதி அல்ல. இன்றைய காலகட்டத்தில் அது மனிதர்களின் அன்றாட வாழ்வின் அவசியத் தேவையாக மாறியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படும் போதெல்லாம் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கை மட்டுமே.

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், இந்த நீண்ட நேர மின்வெட்டுகளுக்கான உண்மையான காரணம் என்ன? உற்பத்தி குறைவா? நிர்வாகத் தோல்வியா?
பராமரிப்புப் பணிகளா? அல்லது மக்களுக்குச் செல்ல வேண்டிய மின்சாரம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்காக திருப்பிவிட படுகிறதா?

இன்று மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் இந்த சந்தேகத்தை வெறும் அரசியல் விமர்சனமாகக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இருளில் தவிப்பது ஏழை மக்களின் வீடுகள். ஆனால் வெளிச்சத்தில் இயங்கிக் கொண்டிருப்பது பெரும் தொழில் வளாகங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் என்ற காட்சியே மக்களின் மனதில் கேள்விகளை உருவாக்குகிறது.

ஒரு தாய் தனது குழந்தைக்கு விசிறி வீசிக்கொண்டு இரவைக் கடக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தேர்வை எதிர்நோக்கும் மாணவன் மெழுகுவர்த்தி ஒளியில் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஆனால் இதற்கான தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கள்ள மௌனம் காக்கின்றனர். மக்கள் கேட்பது மின்சாரத்தை மட்டும் அல்ல. உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும் தான்.

எனவே, தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மின்வெட்டுகள் தொடர்பான உண்மையான காரணங்களை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும்.

மேலும், மாவட்ட வாரியான மின்சார உற்பத்தி, தேவை மற்றும் விநியோகம் குறித்த முழுமையான தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.

அத்துடன், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மின்சார விநியோக விவரங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும். முன்அறிவிப்பின்றி நடைபெறும் மின்வெட்டுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதோடு, மின்தடை காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகள், சிறு தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நிரந்தரத் தீர்வுகளை உருவாக்க வேண்டும்.

மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது அரசின் அடிப்படை பொறுப்பு என்பதால், இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+