இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டிருப்பது, தேர்தல் களம் மீண்டும் சூடுபிடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகி இருக்கும் நிலையில், தற்போது இடைத்தேர்தல் குறித்த பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Tamil Nadu Assembly Bypoll election commission

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பெரிய தேர்தல் சோதனையாக இந்த இடைத்தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல்

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் வென்ற அவர், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த எஸ். ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த பி. சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்.

திருச்சி கிழக்கு

இதன் காரணமாக திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானால், பொதுவாக 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. அந்த அடிப்படையில், இந்த 5 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாராம்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அட்டவணையை வெளியிடலாம் என்பதால் அனைத்து முன்னேற்பாடுகளையும் முன்கூட்டியே முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளதாம். மேலும், ஜூன் 22-ஆம் தேதிக்குள் தேவையான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடத்தப்படும் பகுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள் தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதிகாரிகள் மாற்றம்

தங்களது சொந்த தொகுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகளும் மாற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வருவாய்த் துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், துணை ஆட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் காவல்துறையின் களப் பணியாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணி

மேலும், அடுத்த 6 மாதங்களில் ஓய்வு பெறவுள்ள அதிகாரிகள் தேர்தல் பணிகளில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்றும், ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றச்சாட்டு எதிர்கொண்டு வரும் அதிகாரிகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு எந்த அளவில் உள்ளது என்பதை அளவிடும் வாய்ப்பாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. அதேநேரம், தேர்தலில் பின்னடைவை சந்தித்த திமுக மற்றும் உள்கட்சி சிக்கல்களில் சிக்கியுள்ள அதிமுக ஆகிய கட்சிகளுக்கும் இது முக்கியமான அரசியல் சோதனையாக அமைய உள்ளது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததன் பின்னர் நடைபெறவுள்ள தேர்தல் என்பதால், அந்த தொகுதி மீது தான் அனைத்து அரசியல் கட்சிகளின் முழு கவனம் திரும்பியுள்ளது.

தமிழக அரசியல்

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. ஒருபுறம் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் ஆணையமும் நிர்வாக ரீதியான பணிகளை தீவிரப்படுத்தியிருப்பதால், தமிழக அரசியல் களம் மீண்டும் தேர்தல் பரபரப்பை சந்திக்கத் தயாராகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+