தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பே திமுக மீது அட்டாக்கை ஆரம்பித்த பிரதமர் மோடி.. தமிழில் ட்வீட்!
சென்னை: "ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது" என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தமிழில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சுகள், தொகுதிப் பங்கீடு உடன்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

என்.டி.ஏ கூட்டணியில் பாமக, அமமுகவும் கைக்கோர்த்துள்ளன. கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் மோடி வருகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறேன்.
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications