"இதுவரை இல்லாத புதிய உச்சம்.. சாதனை படைத்த தமிழகம்!" திரும்பி பார்க்கும் அண்டை மாநிலங்கள்.. வாவ் செம
சென்னை: மாற்று வழி மூலம் மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே சோலார் மின் உற்பத்தி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சோலார் மின்சார உட்கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்தப்படும் நிலையில், வரும் காலங்களில் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் மின்வாரியமான டான்ஜெட்கோ இப்போது மாற்று வழியில் மின்சாரம் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாகச் சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு மின்வாரியம் கவனம் செலுத்தி வருகிறது.

சூரிய ஒளி: சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டும் மின்சாரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு 43.20 மில்லியன் யூனிட் (Mu) சூரிய சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தளவுக்கு மின்சாரம் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை, சூரிய மின் உற்பத்தி 5,648 மெகாவாட்டாக (மெகாவாட்) உச்சத்தை எட்டி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 8,574 மெகாவாட் அளவுக்குச் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் உட்கட்டமைப்பு இருக்கிறது. குறிப்பாக அதில் 1,462 மெகாவாட் கடந்த 2023-24ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டதாகும். மேலும், சுமார் 200 மெகாவாட் மின்சாரம் வீடுகளில் உற்பத்தி செய்யும் வகையிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சம்: இதன் மூலமாகவே ஒவ்வொரு மாதமும் மின்சாரம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மூலம் 8,145/53 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. பலரும் சூரிய ஒளி மின்சாரத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம் 100 மெகாவாட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உட்கட்டமைப்பு தயாராக இருப்பதால் தெளிவான வானம் இருக்கும் போதெல்லாம் மின் உற்பத்தி அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல காற்றாலை மின் உற்பத்தியும் மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் இது 78.115Muஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழ்நாட்டில் மின் தேவையும் குறைந்து 346.56 Mu ஆக இருந்தது. அதாவது அன்றைய தினம் தமிழ்நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தில் சுமார் 35%ஐ காற்றாலை மற்றும் சூரிய சக்தி மட்டும் பூர்த்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது..
அதிகரிக்கும் மின் உற்பத்தி: நிலக்கரி மூலம் அனல் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு தான் இப்போதும் அதிகமாக இருக்கிறது. இருப்பினும், அனல் மின் நிலையங்களால் புவி வெப்ப மயமாதல் தொடங்கி பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே மாற்றி வழி மின்சாரத்தில் பல நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பது முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications