"ப்ளீஸ் விடுங்க.." போலீசாரிடம் கைகூப்பிக் கெஞ்சிய கரப்பான் பூச்சி கட்சி தலைவர்.. டெல்லியில் பதற்றம்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டம் சட்ட விரோதமாக நடைபெறுவதாக போலீசார் கூறியுள்ள நிலையில், அதையும் தாண்டி போராட்டம் தொடர்கிறது. இதற்கிடையே அபிஜீத் திப்கே அங்கிருந்த போலீசாரிடம், போராட்டத்திற்கு வரும் மக்களைத் தடுக்க வேண்டாம் எனக் கைகூப்பிக் கெஞ்சினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

நீட் போராட்டம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும், நீட் முறைகேடு காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறுகிறது.
விடிய விடிய போராட்டம்
சனிக்கிழமை காலை தொடங்கிய இந்தப் போராட்டம், இரவு முழுவதும் நீடித்தது. டெல்லி காவல்துறை சனிக்கிழமை மாலை 5 மணி வரை மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது. அனுமதி நேரம் முடிந்ததும் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை இடத்தை விட்டு நகரப் போவதில்லை என்று கூறி, அபிஜீத் திப்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கேயே தங்கி விடிய விடியப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
சனிக்கிழமை மதியம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் திரண்டனர். அபிஜீத் திப்கேவின் அழைப்பின் பேரில், அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து 'தட்டு மற்றும் கரண்டிகளை' எடுத்து வந்திருந்தனர். தட்டுகளைத் தட்டி சத்தம் எழுப்பியபடி, கல்வி அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
I request the police to not stop people from coming at Jantar Mantar.
— Abhijeet Dipke (@abhijeet_dipke) June 21, 2026
We are not doing anything wrong, we are just seeking justice for the students who committed suicide. pic.twitter.com/OHK8Bwro4L
கைகூப்பிக் கெஞ்சினார்
இன்று காலையும் போராட்டம் தொடர்ந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர், போராட்ட களத்திற்கு வரும்படி திப்கே அழைப்பு விடுத்தார். மேலும், அங்கிருந்த போலீசாரிடம் சென்ற திப்கே, மக்களைத் தடுக்க வேண்டாம் என்று கைகூப்பிக் கெஞ்சினார். இது தொடர்பாக அவர் மேலும், "ஜந்தர் மந்தருக்கு மக்கள் வருவதை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்காக நீதியை மட்டுமே நாங்கள் தேடுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், போராட்டக் களத்தில் உள்ள பொதுக் கழிப்பறைகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மற்றொரு ட்வீட்டில், "நேற்று இரவு முதல் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை. தயவுசெய்து அதிகாரிகள் தண்ணீர் விநியோகத்தை துண்டிக்க வேண்டாம்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். முன்னதாக, போராட்ட இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், உணவு மற்றும் தண்ணீருக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி மீண்டும் வழங்கப்பட்டது.
பலத்த போலீஸ்
போராட்டம் நடக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனுமதி இன்றி போராட்டத்தைத் தொடர்வது சட்டவிரோதம் என்றும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். இருப்பினும், "கைது செய்வதாக இருந்தால், நானே முதலில் வந்து கைதாவேன்" என்று அபிஜீத் திப்கே உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இன்றும் போராட்டம் தொடர்கிறது. இன்று நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு முடிந்த பிறகு ஜந்தர் மந்தருக்கு வந்து போராட்டத்தில் இணையுமாறு திப்கே அழைப்பு விடுத்துள்ளார். "மக்களின் ஆதரவு இல்லாமல் இந்த இயக்கம் வெற்றி பெறாது, எனவே அனைவரும் முன்வர வேண்டும்" என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications