10th ரிசல்ட்.. 97.57% உடன் புதுக்கோட்டை டாப்! அதிகபட்ச & குறைந்தபட்ச தேர்ச்சி கொண்ட மாவட்டங்கள் எவை?
சென்னை: தமிழகத்தில் இன்றைய தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க இந்தாண்டு அதிகபட்சத் தேர்ச்சி விகிதம் கொண்டுள்ள மாவட்டங்கள் எவை.. குறைந்தபட்சத் தேர்ச்சி விகிதத்தை கொண்ட மாவட்டங்கள் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் கடந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியானது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் ஒட்டுமொத்தமாக 94.31% பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் தென் மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களும் டாப் இடங்களைப் பிடித்துள்ளன. அதிலும் குறிப்பாகப் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சியுடன் தமிழகத்திலேயே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சி விகிதத்தோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து சிவகங்கை 97.54% தேர்ச்சியுடன் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தஞ்சை மாவட்டம் 97.41%மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், 97.31% தேர்ச்சியுடன் திருச்சி 4வது இடத்தைப் பிடித்துள்ளது. கன்னியாகுமரி 97.30% தேர்ச்சியுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
குறைந்தபட்சத் தேர்ச்சி விகிதம் எனப் பார்க்கும்போது ராணிப்பேட்டையில் குறைந்தபட்சமாகத் தேர்ச்சி விகிதம் 86.58%ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து அரியலூர் 87.55% மற்றும் விழுப்புரம் 87.77% உள்ளது. மேலும், கிருஷ்ணகிரியில் தேர்ச்சி 89.43%ஆக உள்ள நிலையில், திருவண்ணாமலையில் அது 90.46%ஆக இருக்கிறது.
வழக்கம் போல இந்தாண்டும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி 96.47% ஆகவும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.15%ஆக உள்ளது. அதேபோல பாடவாரியான தேர்ச்சி என வரும்போது ஆங்கிலத்திலேயே அதிகபட்சத் தேர்ச்சி இருக்கிறது. அதிகபட்சமாக ஆங்கிலப் பாடத்தில் 99.44% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழில் 98.43% பேரும் அறிவியல் பாடத்தில் 98.00% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல சமூக அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தில் முறையே 97.93% மற்றும் 97.36% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிகபட்சமாக 98.14% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.42% ஆக உள்ள நிலையில், ஆண்கள் பள்ளிகளில் இது 88.5%ஆக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 94.34% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 91.86%ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications