அசத்தல் அறிவிப்பு.. பெண்களுக்கான கட்டணமில்லா பஸ்.. அடுத்தக்கட்ட விரிவாக்கத்தை கையிலெடுத்த தமிழக அரசு
சென்னை: பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தை மலைப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என துறை சார் அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது.
மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.

பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்னொரு அதிரடியையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.. அரசுப் போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து சென்னை, தலைமைச்செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.. இதையடுத்து, அலுவலர்களுக்கு அமைச்சர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
போக்குவரத்து கழகம்: புதிய பஸ்கள் அறிமுகப்படுத்துவதையும், பழைய பஸ்களை புதுப்பித்து இயக்கும் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி, அனைத்து பஸ்களையும் தவறாது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையகங்கள், சூரிய மின் தகடுகள் நிறுவுதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், கைரேகை தொழில்நுட்ப வருகைப் பதிவேடு ஏற்படுத்துதல் போன்றவற்றை துரிதப்படுத்த வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பஸ்களை இயக்க ஏதுவாக, பணிக்கு வராத பணியாளர்களை அழைத்துப் பேசவேண்டும். பயணச்சீட்டு முன்பதிவு வசதியை தேர்வு செய்யும்படி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உதவி எண்கள்: உதவி எண்களில் பெறப்படும் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். மழைக் காலத்தில் இடர்பாடின்றிப் பேருந்துகளில் பொதுமக்கள் பயணிப்பதை உறுதிசெய்ய வேண்டும். பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமான, விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதை மலைப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் பயனடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.
மலைப்பகுதிகளிலும், கட்டணமில்லா பஸ்கள் விரிவுபடுத்தப்பட உள்ளது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. இதில், மலைப்பகுதி பெண்கள் அனைவருமே பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications