வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனுக்கு நுரையீரல் பாதிப்பு! எம்ஜிஎம் மருத்துவமனையில் காலமானார்!
சென்னை: வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனுக்கு (72) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
வணிகர் சங்க பேரவையின் தலைவராக வெள்ளையன் செயல்பட்டு வந்தார். இவர் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது வியாபாரிகளுக்கு பல்வேறு அதிருப்தியை ஏற்படுத்தின. இதை பயன்படுத்திக் கொண்ட விக்கிரமராஜா, வணிகர் சங்க பேரமைப்பை உருவாக்கினார்.

இவர் திமுக ஆதரவாளர். விக்கிரமராஜாவுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவின் தூண்டுதலின் பேரில் வணிகர் சங்க பேரவை இரண்டாக உடைக்கப்பட்டுள்ளதாக வெள்ளையன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி உடல்நிலைமேலும் பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆரம்பத்தில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5 ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஆனந்த் மோகன் பாய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
எனினும் வெள்ளையன் குணமாகி மீண்டும் பழையபடி திரும்பி வருவார் என அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் வருத்தத்துக்குரிய செய்தியை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications