கவனம்! அடுத்த 15-20 நாட்கள்.. அப்படியே "ரிப்பீட்" ஆகும்! தமிழ்நாட்டிற்கு வானிலை வல்லுனர்கள் வார்னிங்
சென்னை: அடுத்த 15 - 20 நாட்கள் வடகிழக்கு பருவமழையின் மிக ஆக்டிவான நாட்களாக இருக்க போகின்றன என்று சென்னை ரெயின்ஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. ஏற்கனவே உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வலுவிழந்து உள்ளது. இதன் காரணமாக பெய்து வந்த மழை தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து உள்ளது. இன்னும் 2 நாட்களில் இதன் காரணமாக பெய்த மழை முடிவிற்கு வரும்.
இந்த நிலையில் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. வரும் 09.11.2022 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ரிப்போர்ட்
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை ரெயின்ஸ்.காம் (chennairains.com) வெளியிட்டுள்ள கணிப்பில்,
தென்மேற்கு பருவமழை என்பது ஒரு பெரிய சர்வதேச வானிலை நிகழ்வு. ஆனால் வடகிழக்கு பருவமழை என்பது வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் மழை ஆகும். இது போன்ற வானிலை மாற்றம் இந்த கடல் பகுதியில், சரியான இடத்தில் ஏற்படுவது அவசியம். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு தேவையான மழை இந்த காலகட்டத்தில் பெய்யும். இதனால் மிக கனமழை தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் ஏற்படுவது வழக்கம்.

வடகிழக்கு பருவமழை
தெற்கு வங்கக்கடல் பகுதியில் இந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. வெதர் மாடல்கள் அதைத்தான் சொல்கின்றன. சென்னையில் கடந்த வாரம் மழையை கொடுத்த சுழற்சி தற்போதும் நிலவி வருகிறது. இது இலங்கை அருகே இருப்பதால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அந்த பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

நிலவரம் என்ன
இது இரண்டும் அடுத்த 24- 48 மணி நேரத்தில் இணைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் அடுத்த 15 - 20 நாட்கள் வடகிழக்கு பருவமழையின் மிக ஆக்டிவான நாட்களாக இருக்க போகின்றன. அடுத்த இரண்டு வாரங்கள் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இதனால் கனமழை பெய்யும். இந்த கனமழை தொடர்ச்சியானதாகவும் நீண்டதாகவும் இருக்க போகிறது.

அடுத்த 15 - 20 நாட்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் இருந்தது போல இந்த வாரமும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்தது போலவேதான் இப்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு இலங்கை பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதனால் கடந்த வாரம் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் இருந்தது போல இந்த வாரமும் கவனமாக, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சென்னை
அடுத்த இரண்டு தினங்களில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் 20 செமீ வரை மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. இந்த மழை நவம்பர் 10 முதல் 12ம் தேதி வரையிலான நாட்களுக்கு இடையில் மிக தீவிரமாக பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதி முழுவதும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். முக்கியமாக சிதம்பரம் மற்றும் சென்னை இடையேயான பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. முக்கியமாக சென்னையில் இந்த காலகட்டத்தில் மிக கனமழை இருக்கும், என்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications