ஆம்பூர் பிரியாணி முதல் கருவாடு சூப் வரை! பெசன்ட் நகரில் 235 வகைகளுடன் நாளை உணவுத் திருவிழா!
சென்னை: தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழாவை டிசம்பர் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் 200- க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

தமிழ்நாடு மகளிர் மேமபாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மகளிர் குழுவினரின் சமையல் திறமையை வெளிக்கொணரும் வகையில் சென்நை பெசன்ட் நகரில் நாளை முதல் 24 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த பாரம்பரிய உணவுகளான ஆம்பூர், திண்டுக்கல் பிரியாணி, கொங்கு மட்டன் பிரியாமி, விருதுநகர் பரோட் கடலூர் மீன் புட்டு, கருவாடு சூப், அரியலூர் தோசை, மயிலாடுதுறை இறால் வடை, சிவகங்கை நெய் சாதம், தருமபுரி ராகி அதிரசம், சேலம் தட்டு வடை, காஞ்சிபுரம் கோயில் இட்லி, நீலகிரி ராகி களி, தென்காசி உளுந்தங்களி, சென்னை தயிர் பூரி, திருச்சி நவதானிய புட்டு, நாகை மசாலா பணியாரம், விருதுநகர் கரண்டி ஆம்லெட், வேலூர் ராகி கொழுக்கட்டை உள்ளிட்ட 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெறுகின்றன.
இதற்கு 38 உணவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர பனை பொருட்கள், 90களின் நினைவுகளை தூண்டும் தின்பண்ட வகைகள், செட்டிநாடு பலகாரங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய 12 சிறப்பு கவுன்ட்டர்கள் வைக்கப்படுகின்றன.
இங்கு உணவுகள் மட்டுமின்றி மாலை நேரங்களில் பொதுமக்களைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மகளிர் குழுக்களுக்கு விற்பனை குறித்த நுணுக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். இந்த உணவுத் திருவிழாவுக்கு பொதுமக்கள் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. அப்போதும் இது போன்ற பாரம்பரிய உணவுகளான மதுரை கறி தோசை, கன்னியாகுமரி பழம் பொறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, சிவகங்கை மட்டன் உப்புக் கறி உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications