பாஜகவுடன் சேர்ந்தால் நிராகரிப்பு நிச்சயம்- நாம் தமிழருக்கு 'ஈரோடு கிழக்கு' பாடம்- திருமுருகன் காந்தி
சென்னை: பாஜக எனும் இனதுரோகியோடு கைகோர்க்கும் எவரையும் தமிழர்கள் நிராகரிப்பார்கள் என்பதை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வாக்குகளுக்காக பெரியாரை விமர்சித்த சீமானின் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்ததை சுட்டிக்காட்டி இதனைத் தெரிவித்துள்ளார் திருமுருகன் காந்தி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளதாவது: அதிமுக, பாமக, அமமுக தேமுதிக, பாஜக ஆகியவை போட்டியிடாத போதிலும் கட்டுத்தொகையை சீமானால் பெறமுடியாமல் போனதற்கும், குறைவான வாக்குகளை பெறுவதற்கும் காரணியாக களத்தில் இயங்கிய அனைத்து பெரியாரிய தோழர்களுக்கும், பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்களுக்கும் வாழ்த்துகள்.

திமுகவின் எதிர்கட்சியாக, எதிரியாக தன்னை காட்டவிரும்பிய சீமானின் அரசியல் தோல்வியில் முடிந்துள்ளது. எதிர்கட்சியாக இயங்க வேண்டுமெனில் மக்களை அணிதிரட்டுவதும், அரசியல்படுத்தி அரசை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவம் முக்கியமானது. ஊடக சந்திப்பில் மட்டுமே திமுக அரசை விமர்சிப்பதாக நாடகமாடி வந்தவர் சீமான் என்பதை மே17 தொடர்ந்து கூறியுள்ளது. பல முக்கிய அரசியல் கோரிக்கைகளை சீமான் முன்னெடுக்காமல் வாய்சவடாலோடு நிறுத்திக்கொண்டாரென அவரது சமரச அரசியலை அம்பலப்படுத்தியது மே17 இயக்கம்.
ஈரோடு தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில், எதிர்கட்சியாக தம்மால் உருவாக முடியாததால், பாஜகவோடு சமரசம் செய்து, அதன் வாக்குகளை பெற முனைந்தார். இதற்காகவே பெரியாரை இழிவு செய்தார். பாஜக வாக்குகள், இந்துத்துவ மனநிலை கொண்ட சாதிய வாக்குகள், அதிமுகவின் உதிரி வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற அவரது திட்டம் தோற்றது. ஆனால், பெரியாரின் மீதான அவதூறும், பெரியாரிய தோழர்களின் அயராத களப்பணியும் அவரை வீழ்த்தியது. 22 சுயேட்சை வேட்பாளர்கள் மேடையை பெரியாரிய தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். தனது ஆதரவு சக்திகளின் மூலம் 50,000 வாக்குகளை கடக்கலாம் எனும் சீமானது கனவை பெரியாரிய எதிர்ப்பு தகர்த்தது.
கடந்த தேர்தலை விட அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம் என சீமான் தனது தம்பிகளுக்கு ஆறுதல் அளிக்கலாம், அல்லது சுயேட்சைகள் வாக்கு வாங்கவில்லையென எள்ளல் செய்யலாம். சுயேட்சைகள் தமக்கான இலக்கான சீமானை வீழ்த்துவதில் வெற்றிபெற்றுள்ளனர். அதிக வாக்குகள் பெறும் சீமானின் வாய்ப்பை தகர்த்தனர். குறைந்தபட்சமாக 20,000-30,000 வாக்குகளை இழந்துள்ளார்.
அதிமுக, தேமுதிக, பாமக, அமமுக, எஸ்.டி.பி.ஐ என பல்லாயிரம் திமுக எதிர்ப்பு வாக்குகளில் சிறுவிகிதம் மட்டுமே சீமானுக்கு கிடைத்துள்ளது. திமுக எதிர்ப்பாளர்கள், திமுக மீதான அதிருப்தி கொண்டவர்கள், திமுகவின் எதிர்கட்சியாளர்கள் என எவரும் சீமானை திமுகவின் எதிர்க்கட்சியாக கருதவில்லை. அதிமுக-பாஜக பிரமுகர்கள் சிலரை தோழர்கள் பிரச்சாரத்தில் சந்தித்தபோது தெரிவித்த எதிர்பார்ப்பில், ஊடகவியலாளர்கள் தெரிவித்த இலக்கில் பாதியளவு வாக்குகளை கூட அவர் பெறவில்லை. சொத்துவரி உயர்வு, மின்சார கட்டணம் போன்றவற்றினால் திமுகவின் மீதான எதிர்ப்பு மனநிலை மக்களிடம் வெளிப்பட்டது. இவை ஏன் சீமானுக்கான வாக்குகளாக மாறவில்லை? அவருக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை?
சீமான் மீதான அவநம்பிக்கை, அவரது நிலைப்பாடற்ற அரசியல், அநாகரீகமான அரசியல் பேச்சுகள், அவதூறுகள் மக்களிடம் கசப்புணர்வை உண்டாக்கியிருந்தன. இதில் உச்சபட்சமாக பெரியார் மீதான சீமானின் அவதூறுகள் மக்களை அவருக்கு எதிராக மாற்றியது. பிற கட்சிகளும் போட்டியிட்டிருந்தால் சீமானின் வாக்கு விகிதம் பலமடங்கு குறைந்திருக்கும். பெரியாரின் ஆதரவாளர்களாக 22பேர் சுயேட்சையாக பரப்புரை மேற்கொண்டவர்கள் மொத்தமாக 6000-7000 வாக்குகளை பெற்றுள்ளனர். எவரும் தமக்கான வாக்கு சேகரிப்பை செய்யவில்லை. சம்பிரதாயமாக சின்னங்களை தெரிவித்து, சீமானின் அவதூறுகளை அம்பலப்படுத்தினார்கள்.
சீமான் நடத்திய பெரியார் எதிர்ப்பு எடுபடவில்லை என்பதை அண்ணாமலையின் பேச்சே உறுதிசெய்துள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டணி தனது எதிர்ப்பு போராட்டத்தை ஈரோட்டிற்கும் கொண்டு சென்றது. சீமானை ஈரோடு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் களம் இறங்கியது. மக்களிடத்தில் சீமானின் பொய்களை அம்பலப்படுத்தி தோற்கடித்துள்ளனர். இந்த வெற்றிக்கு காரணாமாக விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், அவரது கட்சி தோழமைகள், தோழர் கே.எம்.சரீப் ஆகிய இருவருமே சாத்தியப்படுத்தியவர்கள். பெரியாரிய தலைவர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள், தோழர் சுந்தரவள்ளி, தோழர் பாண்டியன் மற்றும் எண்ணற்ற பெரியாரிய தோழமைகள் களத்தில் இயங்கி அம்பலப்படுத்தினர். வன்முறைகளை தபெ.திக தோழமைகள் எதிர்கொண்டனர். இப்பரப்புரை நிகழவில்லையெனில் சீமான் பெரியாரை இழிவு செய்தது பெரும்பகுதி மக்களுக்கு சென்று சேராமலேயே போயிருக்கும். இவ்வகையில் பெரியார் மீதான சீமானின் அவதூறு நாம் தமிழரின் அரசியலுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பெரியாரை இழிவு செய்யவேண்டும் எனும் நோக்கமுடைய பிறருக்கும் இது பாடமாக அமையும்.
பாஜக எனும் இனதுரோகியோடு கைகோர்க்கும் எவரையும் தமிழர்கள் நிராகரிப்பார்கள் என்பதை தமிழர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். ஈரோடு மக்களுக்கு எமது மகிழ்ச்சியும், வாழ்த்துகளும். இவ்வாறு திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications