படுத்து கொண்டே போர்வைக்குள்..! திருட்டு வீடியோ எடுப்பது எப்படி? தமிழ் ராக்கர்ஸ் பகீர் வாக்குமூலம்
சென்னை: கேரள சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் நிர்வாகிகள் குமரேசன், பிரவீன் குமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திரையரங்குகளில் அவர்கள் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தது எப்படி என்பது குறித்து வாக்குமூலமாக அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் திரையரங்குகளில் எப்படி திருட்டுத்தனமாக வீடியோ எடுக்கிறார்கள் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது: முக்கிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளன்று தமிழகம், கேரளா, கர்நாடகாவில் படுத்துக் கொண்டே திரைப்படம் பார்க்கும் வகையிலான ரிக்ளைனர் சீட்டுகள் கொண்ட திரையரங்குகளில் நடுவரிசையில் 5 இருக்கைகளை முன் பதிவு செய்து கொள்வோம்.

வரிசையாக அமர்ந்திருக்கும் எங்கள் 5 பேரில் நடுவில் இருப்பவர் போர்வையால் தன்னை மூடிக் கொண்டு கேமராவை அதனுள் வைத்து வீடியோ பதிவு செய்து வந்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து உடனே அவர்களுடைய இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுகிறார்கள்.
இதனால் மக்கள் தியேட்டருக்கு போகாமல் தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்து பார்ப்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விடுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன.
ஆனால் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வரும் படங்களை தடை செய்யவும் முடியாமல், அந்த நிர்வாகிகளை கண்டுபிடிக்கவும் முடியாமல் போலீஸார் திணறி வந்தனர். எந்த படங்கள் புதிதாக வந்தாலும் அதை இணையதளத்தில் ஒளிபரப்ப தடை கோரி படத் தயாரிப்பாளர்கள் தரப்பு நீதிமன்றத்தை அணுகும்.
அவ்வாறு அணுகி படம் இணையதளத்தில் வெளியாக தடை வாங்கினாலும், படம் வெளியான அடுத்த சில மணி நேரத்தில் இணையதளத்தில் படம் வந்துவிடுகிறது. இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி வேட்டையன் படம் வெளியானது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் நடித்த இந்த படத்தை லைகா தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பார்த்து ரசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் படம் வெளியான சில நேரங்களில் வேட்டையன் படம் இணையத்தில் வெளியானது. அஜயண்டே ரண்டம் மோஷனம் என்ற மலையாள படத்தின் சட்டத்திற்கு புறம்பான காப்பியையும் டெலிகிராமில் ரிலீஸ் செய்ததாக தமிழ் ராக்கர்ஸ் நிறுவன நிர்வாகிகள் இருவர் கடந்த 11 ஆம் தேதி இரவு கொச்சி சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் குமார், குமரேசன் ஆவார்கள். இவரையும் பெங்களூரில் வைத்து கைது செய்தனர். அது போல் குருவாயூர் அம்பலநடையில் என்ற மலையாள படத்தையும் இவர்கள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications