அட கொடுமையே.. தமிழை பாதுகாக்க போராடிய பாஜக.. பதாகையிலேயே எழுத்துப்பிழை! ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
சென்னை: திமுகவிடம் இருந்து தமிழை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் இன்று நாமக்கலில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சித் தொண்டர் வைத்திருந்த பதாகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் வார்த்தைகள் முழுக்க எழுத்துப் பிழையாக இருந்தது விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது.
இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டன.
இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஸ்டாலின் அறிக்கை
இதனை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.

எச்சரிக்கை
அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும்." என குறிப்பிட்டு இருந்தார்.

திமுக போராட்டம்
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய அரசின் இந்தித்திணிப்பு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக ஆர்ப்பாட்டம்
ஆனால், தமிழ்நாடு பாஜகவோ, தாய்மொழிக்கு திமுக அரசு முடிவுரை எழுத முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி #Save_our_ Tamil என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தது. இந்த நிலையில் தமிழை காக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் அக்டோபர் 27 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அக்கட்சித் தலைமை அறிவித்தது.

எழுத்துப்பிழை
அந்த வகையில் இன்று கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் நாமக்கலிலும் பாஜக ஆர்ப்பட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சித் தொண்டர் தூக்கி வைத்திருந்த பதாகையில், பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கு என்று கூறுவதற்கு பதிலாக "கட்டயமாக்கு, கட்டயாமாக்கு" என்று என்று பிழையாக குறிப்பிட்டிருந்தது. இதனை குறிப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications