Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியார், எம்எஸ் சுப்புலட்சுமி, ராஜாஜி, விஜயேந்திரர்-தமிழ்த் தாய் வாழ்த்து பாடலும் சில சர்ச்சைகளும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்வில், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் திராவிட நல் திருநாடும் என்ற வரி தவிர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் குறித்து ஏற்கனவே சில சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் கேரளா மாநிலம் ஆலப்புழையில் பிறந்த தமிழறிஞரான மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை. அவரது 4,500 வரிகள் கொண்ட நாடக நூலில் உள்ள ஒரு பாடல்தான் தற்போது தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நீராரும் கடலுடுத்த என்பதாகும்.

tamil thaai vazhthu tamilnadu

1911-ம் ஆண்டு கரந்தை தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. கரந்தை தமிழ்ச் சங்கத்தின் 2-வது ஆண்டு முதல் நீராரும் கடலுடுத்த பாடல், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக இடம் பெற்று வந்தது.

அண்ணா, கருணாநிதி: பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது., அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீராரும் கடலுடுத்த பாடல் மற்றும் கரந்தைக் கவியரசுவின் வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே ஆகிய 2 பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டன. அண்ணாதான் நீராரும் கடலுடுத்த பாடலை தேர்வு செய்தார். ஆனால் பேரறிஞர் அண்ணா மறைந்த நிலையில் முதல்வரான கருணாநிதி, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக 'நீராரும் கடலுடுத்த' பாடலை தேர்ந்தெடுத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாட வேண்டும் என 1970-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தார்.

தந்தை பெரியாரின் விமர்சனம்: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் தந்தை பெரியார். 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தந்தை பெரியார், அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் "அ' வருமா என்று கேட்கிறேன்.

tamil thaai vazhthu tamilnadu

தமிழ்த் தாயால் படிக்க வைக்க முடிந்ததா?: திராவிட இயக்கம் தோன்றுகிறவரை, தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100க்கு 5 பேர்தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது? அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால், உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என பேசினார்.

ஆரியம் போல வழக்கொழிந்து.. நீக்கம் ஏன்?: 1970-ம் ஆண்டு தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்பாக திமுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://kalaignar.dmk.in/2019/08/02/tamizhthai-vazhthu/) "அண்ணா மறைவுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர் கலைஞர், 1970-ம் ஆண்டு தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் புதிய ஆணை ஒன்றை பிறப்பித்தார். அதன்படி அரசு விழாக்கள், கல்வி நிலையங்களின் விழாக்கள் ஆகியவற்றின் தொடக்கத்தில் பாடப்படும் இ றை வணக்கத்துக்குப் பதிலாக, மனோன்மணீயம் காப்பியத்தில் பெ.சுந்தரம்(பிள்ளை) எழுதிய "நீராருங் கடலுடுத்த" எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படவேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, இன்றுவரையிலும் 'நீராருங் கடலுடுத்த' பாடல் அரசு விழாக்களிலும், கல்வி நிலைய விழாக்களிலும் பாடப்பட்டு வருகின்றது. தமிழ் மொழியை வாழ்த்தும் இப்பாடலில், 'ஆரியம் போல் உலக வழக்கழிந் தொழிந்து' என்று வரும் வரியை, வாழ்த்துப் பாடலில் ஒப்புமையும் வேண்டாம் பிறிதொரு மொழி அழிந்ததை குறிக்கவும் வேண்டாம் என சில வரிகளை நீக்கி அந்தப் பாடலை 'தமிழ்த்தாய் வாழ்த்தாக' பாடச் செய்தார் செய்தார் முதலமைச்சர் கலைஞர்" என எழுதப்பட்டுள்ளது.

ராஜாஜி கேட்டுக் கொண்டாரா?: ஆனால் ஆரியம் போல் உலக வழக்கழிந் தொழிந்து என்ற வரியை மூதறிஞர் ராஜாஜி கேட்டுக் கொண்டதாலேயே முதல்வர் கருணாநிதி நீக்கிவிட்டார் என்பது தமிழ்த் தேசிய இயக்கத்தினரின் விமர்சனமாகும்.

tamil thaai vazhthu tamilnadu

பாட மறுத்த எம்.எஸ்.சுப்புலட்சுமி: மேலும் "தமிழ்மொழி வாழ்த்தான மனோன்மணியம் சுந்தரனாரின் 'நீராடும் கடலுடுத்த' பாடலை பாடித் தருமாறு அன்றைய தி.மு.க. அரசு கேட்டுக் கொண்டபோது, அதை பாட மறுத்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி" என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் (பெரியார் முழக்கம், அக்டோபர் 2016).

tamil thaai vazhthu tamilnadu

அவமதித்த விஜயேந்திரர்: 2018-ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்ட போது, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் இருக்கையில் உட்கார்ந்திருந்தது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. அதேநேரத்தில் தேசிய கீதம் பாடப்பட்ட போது விஜயேந்திரர் எழுந்து நின்றார். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் பாடுவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

tamil thaai vazhthu tamilnadu

ஆளுநர் ரவி நிகழ்ச்சி : தற்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் திராவிட நல் திருநாடு என்கிற வரிகள் தவிர்க்கப்பட்டது சர்ச்சையானது. இதனை கடுமையாக கண்டித்த முதல்வர் ஸ்டாலின், திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினார்.

முதல்வர் ஸ்டாலினின் இனவாதம் என விமர்சனம்: ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+