”தமிழ்நாட்டு” மக்கள் பேரன்போடு..5 வரி நன்றி அறிக்கையில் ‘தமிழகம்’ டோனை திடீரென மாற்றிய நடிகர் விஜய்
சென்னை: தமது அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தோருக்கு நன்றி தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் யாருக்கும் ஆதரவு தராமல் நேராக 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே அரசியலில் இறங்கி இருப்பதாக அறிவித்திருந்தார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமத்துவ கொள்கை பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும் அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியபடுத்த முடியும். தற்போதைய அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்றால், நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம், சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் இருக்கிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கும் வழிவகுப்பது தான் நமது இலக்கு. அரசியல் தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல. அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். ஏற்கனவே ஒப்புகொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என விவரித்திருந்தார்.
நடிகர் விஜய் அறிவித்த அரசியல் பிரவேசம் தமிழ்நாடு அரசியல் களத்தில் விவாதங்களையும் பல்வேறு கருத்துகளையும் முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 5 வரிகளில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், 'என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்' அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications