100% வெற்றி முதல் கூட்டணி வரை.. திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள்.. பரபர தகவல்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அதேநேரம் 6 மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் படுதோல்வி அடைந்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் வாக்காளர் விவரங்களும் வெளியிடப்பட்டது. ஜனவரி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய ஆலோசனை
இந்தச் சூழலில் சனிக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் கலந்து கொண்டனர். இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

100% வெற்றி
இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். கட்சியில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்திய ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்படும் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 2 பெண்கள் மற்றும் 4 இளைஞர்கள் உட்பட 10 பேர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூட்டணிக் கட்சிகள்
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்த மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர்களே போட்டியிடும் இடங்கள் குறித்து உடன்பாடு செய்து கொள்ளலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பொறுப்புடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நூல் வெளியீடு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தீர்மானமும் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பையும் 'தளபதி ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications