"இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப்போகுதோ?” முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிசை ஆவேச கேள்வி!
சென்னை: திமுக அரசால் சீர் செய்யப்படாத இந்த சிங்கார சென்னை எத்தனை பேரை காவு வாங்கப் போகிறதோ? என பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து கிடந்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியாளர் வரலட்சுமி என்பவர் இன்று காலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு சாலையில் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் வரலட்சுமி தூய்மைப் பணியில் ஈடுபட்ட நிலையில், மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், "சென்னையில் மழை வந்தவுடன் சரியான கட்டமைப்பு இல்லாததனால் இப்படி எத்தனை அழுகுரல்களை கேட்கப் போகிறோம். விடியற்காலை துப்புரவு பணிக்குச் சென்ற சகோதரி வரலட்சுமி மழை நீரில் மின்சாரம் பாய்ந்து தன் உயிரை இழந்து இருக்கிறார். அவர் அதிகாலை அந்த இடத்தில் தன் உயிரை தியாகம் செய்து பல பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார்.
காலையில் அந்த மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் அவர் காலை வைக்காவிட்டால் பல பேர் காலை வைத்து உயிரை இழந்து இருப்பார்கள் என்ற கவலை மேலோங்குகிறது. இந்த திராவிட மாடல் திமுக அரசினால் சீர் செய்யப்படாத இந்த சிங்கார சென்னை எத்தனை பேரை காவு வாங்கப் போகிறதோ? நான் தமிழக முதலமைச்சரிடமும், சென்னை மாநகராட்சி இடமும் வேண்டிக் கேட்டுக் கொள்வது தயவு செய்து சென்னையின் கட்டமைப்பை சரி செய்யுங்கள்.
இந்த லேசான மழைக்கே உயிர்கள் பலி வாங்கப்படுகிறது என்றால்... இன்னுமே பெருவெள்ளத்தில் சென்னை சிக்கினால் எத்தனை உயிர்கள் பலி வாங்கப்படுமோ என்று நினைக்கவே பயமாக இருக்கிறது... தயவுசெய்து மக்களை காப்பாற்றுங்கள்.
பின்குறிப்பு... நான் இப்படி பதிவு போட்ட உடனேயே உடனே உபிக்கள். . உத்தரபிரதேசத்தில் நடக்கவில்லையா மத்திய பிரதேசத்தில் நடக்கவில்லையா என்று மனிதாபிமானமே இல்லாமல் பதிவிடுவார்கள்.. முதலில் தமிழகத்தில் உள்ள உயிரை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்... விடியலை நோக்கி என்று எவ்வளவு கதை சொன்னீர்கள். இன்று மழை நீர் வடியாமல் விடியற்காலையிலும் உயிர்கள் பலியாவதை பார்க்க மனது பதைபதைக்கிறது.. விளம்பரங்களை விடுத்து, செயலாற்றுங்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications