பரட்டைன்னு கிண்டலடிப்பாங்க.. காயப்பட்டு இருக்கேன்! சாய்பல்லவி உருவ கேலி.. உருக்கமாக பேசிய தமிழிசை
சென்னை: அரசியலில் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு முன் தன்னை பலர் மோசமான முறையில் உருவ கேலி மற்றும் கிண்டல் செய்ததாக தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமா உலகில் மிக முக்கியமான நடிகையாக உருவெடுத்துள்ளார். தொட்டதெல்லாம் பொன் என்று சொல்லும் அளவிற்கு இவர் நடித்தாலே அந்த படம் அல்லது பாடல் உலக ஹிட் ஆகிவிடுகிறது.
ரவுடி பேபி, சாரங்க தரியா, வச்சிண்டே என்று பல பாடல்கள் சாய் பல்லவியின் நடனம் மற்றும் நடிப்பால் உலக புகழ்பெற்றுள்ளது. அதிலும் சமீபத்தில் இவர் நடித்த ஷியாம் சிங்கா ராய் படம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
லாக்டவுன் ஓவர்.. தமிழ்நாட்டிற்கு 2 குட் நியூஸ்.. இப்படியே போனா விரைவில் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி!
சாய் பல்லவி
முக்கியமாக இந்த படத்தில் அவரின் நடிப்பு கவனம் பெற்றுள்ளது. தெலுங்கு மக்கள் தமிழரான சாய் பல்லவியை தங்கள் வீட்டு மகள் போல கொண்டாடி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் பேஸ்புக் பயனர் ஒருவர் சாய் பல்லவியின் ஷியாம் சிங்கா ராய் பட போட்டோவை பகிர்ந்து அவரின் உருவத்தை கேலி செய்து போஸ்ட் செய்து இருந்தார். சாய் பல்லவியின் உதடு சரியில்லை, அவரின் மூக்கு பெரிதாக இருக்கிறது. ஒரு நடிகைக்கு உண்டான வசீகர தோற்றம் அவருக்கு இல்லை என்று அவர் விமர்சனம் செய்து இருந்தார்.
கிண்டல்
இந்த ஒரு போஸ்ட் இணையம் முழுக்க பெரிய சர்ச்சையானது. இதை தொடர்ந்து சாய் பல்லவியின் தோற்றம் குறித்து இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் விவாதங்கள் நடந்து வருகிறது. சாய் பல்லவிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மொத்த தமிழ் நெட்டிசன்கள் உலகமே இதை பற்றித்தான் பேசுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியவர் நடிகை சாய் பல்லவி. அந்த அளவிற்கு இயற்கையான தோற்றம் மீது விருப்பம் கொண்டவர் சாய் பல்லவி.
சாய் பல்லவி உருவம்
இப்படிபட்டவரை நெட்டிசன்கள் பலர் உருவ கேலி செய்து கிண்டல் செய்தது இணையத்தில் பெரிய சர்ச்சையானது. முகப்பூச்சு அதிகம் இல்லாத இயல்பான தோற்றம் கொண்ட பெண்கள் பலர் இப்போதுதான் தமிழ் சினிமாவிலும், தென் இந்திய சினிமாவிலும் வாய்ப்பு பெற்று வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சாய் பல்லவியின் உருவத்தை வைத்து நெட்டிசன்கள் கேலி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்விற்கு தற்போது தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
புதிய தலைமுறை சேனலில் நடந்த சாய்பல்லவி உருவ கேலி தொடர்பான விவாத நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். தான் எதிர்கொண்ட உருவ கேலிகள் குறித்து அவர் உருக்கமாக கருத்து தெரிவித்தார். அவர் தனது பேச்சில், நான் உருவத்தை வைத்து தொடுக்கப்பட்ட கேலி கிண்டல்களை மிக துணிச்சலாக எதிர்கொண்டு இருக்கிறேன். கேலி, கிண்டலுக்கு ஆளாகும் நபர்களுக்குத்தான் மனசு எவ்வளவு காயம் அடையும் என்று தெரியும். கிண்டல்களால் நான் காயப்பட்டு இருக்கிறேன். என்னுடைய திறமையாலும், அதிக பணியாலும், அதிக உழைப்பாலும்தான் அந்த காயங்களை நான் ஆற்றினேன்.
உருவ கேலிகள்
எல்லோரும் ஒன்று பெரிய மகாத்மாக்கள் கிடையாது. யாராவது ஏதாவது சொன்னால் நமது மனசு வலிக்கும். மக்கள் சொல்லும் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு செல்ல முடியாது. சிலரின் கருத்துக்கள் நம்மை மிக ஆழமாக காயப்படுத்தும். நான் சிலர் என்னை உருவ கேலி செய்த போது அதை புறந்தள்ளிவிட்டு போய் இருக்கிறேன். ஆனாலும் பல முறை காயப்பட்டு இருக்கிறேன்.
பரட்டை என்று கிண்டல்
குள்ளமாக இருப்பதோ, கருப்பாக இருப்பதோ, தலை முடி நன்றாக இல்லாமல் இருப்பதோ நம்முடைய தவறு கிடையாது. என்னை கூட பரட்டை என்றெல்லாம் கிண்டல் செய்துள்ளனர். எல்லாவற்றிலும் அழகு இருக்கிறது. அதனால்தான் பண்டைய காலத்தில் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று கூறினார்கள். ஆண்கள் மீதான பாடி ஷேமிங் இப்படி அதிகம் இல்லை. ஆனால் பெண்களை இப்படி அதிகம் கேலி செய்கிறார்கள்.
பாடி ஷேமிங்
அதேபோல் குள்ளச்சி, நெட்டச்சி, கறுப்பி என்றெல்லாம் பெண்களை விமர்சனம் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். பெண்கள் முன்னேறுவதை தடுக்க முடியாத சமூகம், அவர்களை காயப்படுத்தி அவர்களின் வேகத்தை தடுப்பதற்கான எதிர்மறையான எண்ணம்தான் இது. சாய் பல்லவி மீதான விமர்சனமும் அப்படிப்பட்ட எதிர்மறையான தாக்குதல்தான் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சாய் பல்லவிக்கு ஆதரவாக தமிழிசை பேசி இருக்கும் இந்த கருத்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.