லண்டனுக்கு பறக்கும் அண்ணாமலை..அமித் ஷாவை சந்தித்த தமிழிசை! முக்கிய புள்ளிக்கு வரும் ‘பவர்’..ட்விஸ்ட்
சென்னை: மக்களவைத் தேர்தலில் படுதோல்வி, உட்கட்சி பூசல், மேடையிலேயே கண்டித்த அமித்ஷா என கடந்த சில நாட்களாக பரபரப்பு அரசியலில் சிக்கித் தவிக்கிறது பாஜக. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது குறித்து பாஜகவினர் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவிய நிலையில் திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றது. அந்த கூட்டணி 40க்கு 40 என தமிழகம் புதுவை தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த கூட்டணி தவிர்த்து.. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மக்களவைத் தேர்தலில் களம் கண்டன. இந்த இரண்டு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியுமே தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது அரசியல் களத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததால் தான் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் அண்ணாமலை தான் என சமூக வலைதளங்களில் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகி இருந்தால் பெரிய அளவிலான வெற்றி கிடைத்திருக்கும் குறைந்தது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது பெற்றிருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.
மேலும் கூட்டணி தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அண்ணாமலையின் பேச்சு காரணமாக கூட்டணி அமையாமல் போனது.. இதனால் தான் பாஜக கடும் தோல்வியை சந்தித்தது என கூறியிருந்தார். அவரது கருத்தை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்று பேசியிருந்தார். குறிப்பாக கட்சியில் ரவுடிகள் இருப்பதாக தமிழிசை பேசியது கட்சிக்குள் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மேடையிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்புடன் விவாதித்தார். தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை- தமிழிசை தரப்பு இடையேயான மோதல் குறித்த அப்போது அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ அதிக அளவில் கவனத்தை பெற்ற நிலையில், அடுத்த நாள் அண்ணாமலை தமிழிசையை சந்தித்து பேசி விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.
அதற்கு பிறகு பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடந்ததாகவும், அதன் அறிக்கை மத்திய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பேசப்பட்டது. இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு முதன்முறையாக அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் கூட்டணி கட்சி ஆதரவோடு தான் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஒன்றிரண்டு தொகுதிகள் தமிழகத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தில் பல தொகுதிகளில் டெபாசிட் காலியானது. இதையடுத்து அந்த கட்சியின் தலைமையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் தமிழிசை - அமித் ஷா சந்திப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை அரசியல் தொடர்பான படிப்புக்காக லண்டன் செல்ல இருக்கிறார். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் குறித்து பயில செல்லும் 12 பேரில் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இதன் காரணமாக அவர் ஆறு மாதம் லண்டன் செல்ல இருக்கிறார். அவர் வெளிநாட்டில் இருக்கும் போது கட்சி பணிகளை தமிழக பாஜக அமைப்புச் செயலாளராக இருக்கும் கேசவ விநாயகம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. மேலும் அண்ணாமலையே கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வார் எனவும் தகவல்கள் உலாவுகின்றன.
இந்த நிலையில் தமிழிசை அமித் ஷாவை சந்தித்து இருப்பதன் மூலம் சில முக்கிய பொறுப்புகள் அவருக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்து பேசிய அண்ணாமலையின் ஆதரவாளர்களான திருச்சி சூர்யா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அமித்ஷா தமிழிசை சந்திப்பு தமிழக பாஜகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் வரும் நாட்களில் பல திருப்பங்கள் பாஜகவில் ஏற்படும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications