நீட் தேர்வை ரத்து செய்க.. விஜய் தெறிக்கவிட்ட முழக்கம்.. எதிர்க்கவே முடியாமல் தடுமாறும் தமிழக பாஜக?
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் குரல் கொடுத்துள்ளதுதான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதாவை ஆதரிப்பதாகவும் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவை நடிகர் விஜய்யின் கருத்தை வரவேற்றுள்ளன.
ஆனால் நீட் தேர்வை விடாப்பிடியாக ஆதரிக்கும் தமிழக பாஜகவினரோ நடிகர் விஜய்யை பகிரங்கமாக எதிர்க்கவே முடியாமல் திணறுகின்றனர் என்றே தெரிகிறது. நடிகர் விஜய் நீட் தேர்வை எதிர்த்து பேசிய சில நிமிடங்களிலேயே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டார். நீட்டை எதிர்க்கும் விஜய்-க்கான பதிலாக இருந்தாலும் அந்த அறிக்கை திமுகவையே வசைபாடி இருந்தது. அதாவது விஜய்யை பகிரங்கமாக எதிர்த்து பேசமுடியவில்லை என்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கை வெளிப்படுத்தி இருந்தது என்றே பார்க்கப்படுகிறது.

அந்த அறிக்கையில், நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு AK ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழக பாஜக
பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
அத்துடன் நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? எனவும் அண்ணாமலையின் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டிருந்தது.
தற்போது அதே போல ஒரு மென்மையான குரலில் நடிகர் விஜய்யின் நீட் எதிர்ப்புக்கு மூத்த தமிழக பாஜக தலைவரான டாக்டர் தமிழிசை சவுந்தராஜனும் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் முன்வைக்கும் அனைத்து காரணங்களையும் நான் நிராகரிக்கிறேன். இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. கிராமப்புற மாணவர்கள் பயனடைகின்றனர். ஏன் அரசுப் பள்ளி மாணவர்கள் கூட நீட் தேர்வால் பயனடைகின்றனர். நீட் தேர்வுக்குப் பின்னர் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கூட மருத்துவ படிப்பில் இணைந்துள்ளனர். இவை எல்லாம் நீட் தேர்வால் நிகழ்ந்த சாதகமான அம்சங்கள்.
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதுவதற்காக இந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். உண்மை இப்படி இருக்க நீட் தேர்வுக்கு எதிராக அரசியல்வாதியாக நடிகர் விஜய் பேசியிருப்பது துரதிருஷ்டசவசமானது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications