அதானியை தன் குடும்பத்தினர் சந்திக்கவில்லை என முதல்வர் தெளிவுபடுத்துவாரா?.. தமிழிசை கேள்வி
சென்னை: அதானியை தான் சந்திக்கவில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். நானோ, எனது குடும்பத்தைச் சார்ந்த எவரும் அதானியை சந்திக்கவில்லை என்பதை முதல்வர் முக ஸ்டாலின் உறுதியாகச் சொல்ல வேண்டும். அதானிக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரதியின் புகழைப் பாடுவதில் பாரதிய ஜனதா கட்சி பெருமைப்படுகிறது. மகாகவி பாரதி பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர். தமிழகத்தில் திமுக ஆட்சி காரணமாக, துரதிர்ஷ்டவசமாக ஆட்சியாளர்களால் பாரதி அந்த அளவிற்கு கொண்டாடப்படவில்லை. திமுக அரசு சார்பில் பாரதிக்கு பெரிய விழா எடுக்கப்பட வேண்டும்.

பெண் உரிமைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் பாடினார் பாரதி. ஆனால், பெரியாரை பெண்ணுரிமைக்கு அடையாளமாக சொல்லுகின்ற இந்த அரசு, பெரியாருக்கு முன்பே பெண் உரிமைக்காக குரல் கொடுத்த பாரதிக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை. அதுமட்டுமல்ல தமிழக அரசு பெண்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நான் இங்கு பதிவு செய்கிறேன்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். குற்றவாளிகள் சரியாக கண்டறியப்படாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆசிரியர்களாலேயே பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுகின்றனர்.
மத்திய தணிக்கை அறிக்கை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. பட்ஜெட் ஒதுக்கீட்டில் பெண்களுக்கான பகிர்வின் பிரிவு ஒன்று இருக்க வேண்டும். ஆனால், அந்தப் பிரிவு பல துறைகளில் ஏற்படுத்தப்படவே இல்லை. இந்தியாவிலேயே பெண்கள் கைத்தறியில் அதிக அளவில் வேலை செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. விவசாயத்தில் அதிக அளவில் பெண் வேலை செய்து வரும் நிலையில், சென்ற ஆட்சியில் 7 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு இந்த ஆட்சியில் 0.9 சதவீதமாக மாறியுள்ளது.
ஆகவே, பெண்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் திமுக அரசாங்கம் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. பல துறைகளில் பெண்களுக்கான பிரிவே ஏற்படுத்தப்படவில்லை எனும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, போக்குவரத்துத் துறை கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்ட 256 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை என்பதும், 3,575 ஆக்சிஜன் செறிவூட்டிகளில் 167 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்தப்படவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதனை அரசாங்கம் உடனடியாக சரிசெய்ய வேண்டும். பட்ஜெட் ஒதுக்கீட்டில் கவனம் செலுத்த வேண்டும். பாஜகவில் நிர்வாகத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு இருக்கிறது. கட்சியில் அதிகமாகப் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இது பாராளுமன்றத்திலும் வர வேண்டும் என்பதுதான் கருத்து. ஆனால், மற்ற கட்சியில் கட்சி நிர்வாகத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு கூட இல்லை. அதனை கொண்டு வர வேண்டும்.
முதல்வர், அமைச்சர்கள் உண்மையான பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு கொடுத்த நிதியைக் கூட சரியாகப் பயன்படுத்தாத நிலை தமிழகத்தில் உள்ளது.
அதானி விவகாரத்தில், அதானியை முதலமைச்சர் சந்திக்கவில்லை என்று சொல்கிறார்கள். நானோ, எனது குடும்பத்தைச் சார்ந்த எவரும் அதானியை சந்திக்கவில்லை என்பதை முதல்வர் முக ஸ்டாலின் உறுதியாகச் சொல்ல வேண்டும். அதேபோல, உதயநிதி கூறும்போது, அதானிக்கும், தமிழக அரசுக்கும் எந்தவொரு சம்பந்தமில்லை என்று கூறுகின்றார். அதானிக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அதானி விவகாரத்தை அமெரிக்கா உயர்நீதிமன்றம் பார்த்துக் கொள்ளட்டும். நல்ல திட்டங்களை கொண்டுவர விடாமல் பாராளுமன்றத்தை முடக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று வேண்டாததில் கவனம் செலுத்துகின்றனர். மக்கள் நலனில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications