தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் வேதனை அளிக்கிறது - தமிழிசை செளந்தரராஜன்
சென்னை: பஞ்சாப்பில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கபடிப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் போது திடீரென தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபவுல் அட்டாக் குறித்து முறையிட்ட போது நடுவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதாவது தர்பாங்கா பல்கலைக்கழக வீராங்கனைகள் ஃபவுல் அட்டாக் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் முறையிட்டபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்ிதயுள்ளது. அந்த வீடியோவில், ஃபவுல் அட்டாக் தொடர்பாக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்கின்றனர். பின்னர் ஒரு வீராங்கனை அங்கிருந்து கிளம்பிய நிலையில், அவரிடம் வந்த நடுவர் அவரை தாக்கியது போன்று உள்ளது. உடனடியாக அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்த நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முறையீடு செய்த பல்கலைக்கழக பயிற்சியாளர் பாண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் கைதும் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீராங்கனைகள் தாக்கப்பட்டது வேதனை அளிப்பதாக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, பஞ்சாபில் தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உடனே செய்ய வேண்டும். காயமடைந்த வீராங்கனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து அவர்கள் சென்றிருக்கும் பணி சிறப்பாக அமைய பக்கபலமாக இருந்து அவர்கள் பத்திரமாக திரும்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications