எதையுமே புரிஞ்சுக்காம முட்டையை காண்பிக்கிறது.. செங்கல்லை காண்பிக்கிறது.. உதயநிதிக்கு தமிழிசை கண்டனம்
சென்னை: எதையுமே புரிஞ்சுக்காம முட்டை, செங்கல்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காண்பித்து கொண்டிருக்கிறார் என புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் தொகை அதிகமா இருக்கிற மாநிலங்களுக்கு கூடுதலா புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைக்கும். நீட் வந்தா தரமான மருத்துவர்கள் கிடைப்பாங்கனு சொன்னாங்க. மருத்துவ கல்லூரியில் பணம் வாங்கிட்டு சீட் கொடுக்க மாட்டாங்கனு சொன்னாங்க. ஆனால் முதுநிலை மருத்துவம் முட்டை பெர்சண்டைல் எடுத்தால் போதும் என்கின்றனர் என்று கூறியதுடன் கையோடு முட்டையையும் எடுத்து காண்பித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல், முட்டை: 2021 சட்டசபை தேர்தலின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்பதை விளக்கும் வகையில் ஒற்றை செங்கல் ஏந்தி பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்; அதனைத் தொடர்ந்து முட்டை பெர்சண்டைல் விவகாரத்துக்காக முட்டையை காண்பித்து பேசியிருக்கிறார் உதயநிதி.
தந்த வாக்குறுதி என்னாச்சு?: இது தொடர்பாக புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்: திமுக ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து நீட்டுக்காக என்றுதான் சொன்னார்கள். அப்புறம் ஏன் அப்படி சொன்னாங்க? முதல் கையெழுத்தை நீட்டுக்குப் போட்டுவிட்டு தலையெழுத்தையே மாற்றுவோம் என்று சொன்னார்கள்... இன்று கையெழுத்தியக்கம் நடத்துறாங்க.
உச்சநீதிமன்ற தீர்ப்பையே எதிர்க்கிறீங்களா?: நான் இன்னொன்றையும் கேட்கிறேன்.. நீட் தேர்வு உச்சநீதிமன்றத் தீர்ப்பு கொடுத்திருக்கு.. மற்ற நேரத்தில் எல்லாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு , உச்சநீதிமன்றம் தீர்ப்புன்னு சொல்றாங்க.. இதுவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதனை எதிர்த்து ஒரு கையெழுத்தியக்கம் நடத்துகிறீர்களே.. அதுவும் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு.. இதற்கு முன்னர் மத்திய அரசில் பல ஆண்டுகள் மத்திய அரசில் இருந்த போதும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதனால் நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் கண்துடைப்புதான்.
புரியாமல் செய்யக் கூடாது: இன்னொன்று மறுபடியும் மறுபடியும் சொல்றேன்.. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அவநம்பிக்கையை தயவு செய்து ஏற்படுத்தாதீர்கள். அவர்கள் பாட்டுக்கு படித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து இதில் அரசியல் செய்யாதீங்க.. குட்டையை குழப்பாதீங்க.. முட்டை மார்க் வாங்கினா எல்கேஜியில் கூட சேர்க்க மாட்டாங்க.. எதையும் புரிஞ்சுக்காம முட்டையை காண்பிக்கிறது.. செங்கல்லை காண்பிக்கிறது என்பது எல்லாம் தேவையில்லாதது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications