ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா ?-தமிழிசை
சென்னை: ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தை விட பலமானதா என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் 7 தமிழர்கள் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரஜினி, எந்த 7 பேர் என கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அனைவரும் ரஜினிக்கு எதிராக விவாதிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் ரஜினியின் கருத்து குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ரஜினி கேள்வியை உள்வாங்கியிருக்க மாட்டார். அவரிடம் மீண்டும் ஒரு முறை கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும் என்றார்.
ரஜினியிடம் கேள்வி
இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 7 பேரை தெரியாத அளவுக்கு முட்டாள் அல்ல என்றார். அப்போது பாஜகவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் அளவுக்கு ஆபத்தான கட்சியா என்றும் யார் பலசாலி என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
விவாதம்
அப்போது ரஜினி ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என நீங்களே சொல்லுங்களேன் என்று ஒரே போடாக போட்டார். இந்த பதிலும் விவாதத்துக்குள்ளானது.
பாம்பு உதாரணம்
அதாவது ஒருவர் பலசாலி என்பதால் மட்டும்தான் 10 பேர் சேர்ந்து எதிர்ப்பரா, ஒருவர் கெட்டவர் என்றாலும் அவரை ஊரே ஒன்று கூடி எதிர்க்கும் என்று விவாதம் எழுந்தது. இந்த நிலையில் ரஜினியின் கருத்து குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில் பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதற்காக பாம்பு பலசாலியல்ல என தெரிவித்திருந்தார்.
|
சிங்கம்
இவரது பதிலுக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஆட்டுமந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.