அவினாசி எல்.முருகன், சாத்தூர் நயினார், பல்லடம் அண்ணாமலை.. கமலாலயத்தில் ரெடியான பாஜக வேட்பாளர் லிஸ்ட்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் களமிறங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கமலாலயத்தில் சீட் கேட்டு ஏராளமான நிர்வாகிகளும் தலைமையை நாடி வருவதால், பஞ்சாயத்து பெரிதாகி இருப்பதாக சொல்லுகின்றனர்.
இன்னும் ஒரு நாட்களில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. அதிமுக தரப்பில் 25 தொகுதிகள் கொடுக்க முன் வந்திருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியை விட ஒரு தொகுதி கூடுதலாக வேண்டும் என்று பாஜக கேட்டுள்ளது. இதனால் 29 தொகுதிகள் வரை பாஜகவுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

சென்னையில் 4 தொகுதிகளை பாஜக கேட்டுள்ள சூழலில், தி நகர் மற்றும் வேளச்சேரி ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று அதிமுக தெளிவாக கூறிவிட்டது. இந்த இரு தொகுதிகளில் போட்டியிட பாஜகவில் பலரும் முட்டி மோதி வருகின்றனர். ஏற்கனவே வேளச்சேரி தொகுதி எஸ்ஜி சூர்யா பணியாற்றி வரும் சூழலில், அந்த தொகுதியில் போட்டியிட தமிழிசை செளந்தரராஜனும் காய் நகர்த்தி வருகிறார்.
மறுபக்கம் தி நகர் தொகுதியில் போட்டியிட வினோஜ் பி செல்வமும் ஆர்வமாக உள்ளார். பொங்கல் பண்டிகையின் போது தொகுதியில் பரிசுப் பொருட்களையும் வழங்கி இருந்தார். அதேபோல் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை மாநில அரசியலுக்கு திரும்ப டெல்லி பாஜக அறிவுறுத்திவிட்டது. இதன் காரணமாக அவினாசி தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறாராம் எல்.முருகன்.
அதுமட்டுமல்லாமல் சட்டசபைத் தேர்தலுக்கு பின் எல்.முருகனின் மத்திய இணையமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பின் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகளாக மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பணியாற்றியுள்ள சூழலில், அவரை மாநில அரசியலுக்கு திரும்ப பாஜக உத்தரவிட்டிருக்கிறது.
அதேபோல் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றாலும், பல்லடம் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. மறுபக்கம் நெல்லை தொகுதியில் நிலவரம் சரியில்லாததால், நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதிக்கு மாறப் போவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
வானதி சீனிவாசனும் கோவை வடக்கு தொகுதி மாறுகிறார். இன்னொரு பக்கம் சரத்குமார், விஜயதரணி, சசிகலா புஷ்பா உள்ளிட்டோருக்கு சீட் இன்னும் உறுதியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் வாசுதேவநல்லூரில் ஆனந்தன் அய்யாசாமி, திருச்செங்கோட்டில் கேபி ராமலிங்கம், ஒசூரில் நரசிம்மன் உள்ளிட்டோர் சீட் கேட்டு காய் நகர்த்தி வருவதாக கமலாலய வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications