3,518 வேட்பாளர்களின் டெபாசிட் காலி.. லிஸ்டில் பிரேமலதா பெயரும் இருக்கு! 2021 தேர்தலில் நடந்தது என்ன?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் சூழலில், ஒன் இந்தியா தமிழ் சார்பாக 2021 சட்டசபைத் தேர்தல் குறித்த தகவல்கள், டேட்டாக்கள், பின்னணியில் உள்ள செய்திகள் குறித்து தொடர்ச்சியாக எழுதப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 சட்டசபைத் தேர்தலில் மொத்தமாக 3,859 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இவர்களில் டெபாசிட் வாங்கியவர்கள் எவ்வளவு பேர், டெபாசிட் தொகையை இழந்தவர்கள் எவ்வளவு பேர் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகை கட்ட வேண்டும். அந்த தொகையை மீண்டும் பெற வேண்டுமென்றால், தேர்தலில் 16.67% வாக்குகளை கைப்பற்ற வேண்டும்.

கடந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக கூட்டணி என்று 5 முனைப்போட்டி நிலவியது. இந்த 5 முனைப் போட்டியில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் கட்சிகள் டெபாசிட்டை இழந்தன. டெபாசிட் தொகையை இழப்பது என்பது தேர்தல் அரசியலில் மிகவும் அவமானகரமான சம்பவமாக பார்க்கப்படும்.
அந்த வகையில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 3,859 வேட்பாளர்களில் 3,518 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்திருக்கின்றனர். இதில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களில் யாருமே டெபாசிட் தொகையை இழக்கவில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியில் சீமானை தவிர்த்து வேறு எந்த வேட்பாளரும் டெபாசிட் தொகையை மீண்டும் பெறவில்லை.
மறுபக்கம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன், சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன் மட்டுமே டெபாசிட் தொகையை மீண்டும் பெற்றனர். அமமுகவை பொறுத்தவரை டிடிவி தினகரன் உட்பட மொத்தமாக 9 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை பெற்றனர். ஆனால் தேமுதிக சார்பாக போட்டியிட்ட 60 வேட்பாளர்களில் ஒருவர் கூட டெபாசிட் தொகையை கைப்பற்றவில்லை.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட 13.17% வாக்குகளை தான் பெற்று தோல்வி அடைந்தார். அதேபோல் சுயேட்சையாக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் டெபாசிட் தொகையை பெற்றார். மற்ற அனைத்து சுயேட்சைகள் மற்றும் இதர கூட்டணி கட்சிகள் அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.












Click it and Unblock the Notifications