சென்னை கவர்னர் மாளிகையில்.. ஆளுநர் ஆர்.என் ரவியுடன் தமிழக பாஜக தலைவர்கள் சந்திப்பு.. முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜக தலைவர்கள் சென்னை ஆளுநர் மாளிகையில் கவர்னர் ஆர்.என் ரவியை சந்திப்பு பேசினர்
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசுத் திட்டங்களை நேரடியாகத் தொடங்கி வைக்கப் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். ஹுசைன்வாலாவில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சுமார் 100 கிலோமீட்டர் கார் பிரதமர் மோடி சென்றார்.
அப்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வெறும் 10 கிலோமீட்டர் மட்டுமே இருந்த நிலையில், மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் காரை விவசாயிகள் மறித்தனர்.

பஞ்சாப் சம்பவம்
இது தொடர்பாக வெளியான ஃபோட்டோக்களில் மேம்பாலம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பிரதமர் மோடி காத்திருக்கிறார். அவரை சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்தபடி இருந்தனர். இப்படியே சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி காத்திருந்தார். அதன் பின்னர் வேறுவழியின்றி பிரதமர் மோடியின் கார் திரும்பியது. பிரதமரின் பாதுகாப்பு பிரோடோகாலில் இது மாபெரும் குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை
பஞ்சாப் போலீசாஸ் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியதாலேயே இந்தச் சம்பவம் நடந்ததாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்படி தமிழ்நாட்டிலும் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, "எங்கள் ஆதங்கத்தை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

ஆளுநருடன் சந்திப்பு
அதன் அடிப்படையில் தற்போது தமிழக பாஜக தலைவர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு பேசினர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் 4 எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் ஆளுநரைச் சந்தித்தனர்.

ஆலோசனை
பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இந்தச் சந்திப்பில் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர நீட் விவகாரம் குறித்து நாளை நீட் அனைத்து கட்சி கூட்டம் நடக்கும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications