ராஜ்யசபா எம்பியாகும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை? வலைதளங்களில் பரவும் தகவல்! உண்மையா?
சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வாக உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக செய்திகள் பரவி வருகிறது. இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில் ராஜஸ்தானில் உள்ள உண்மை நிலை பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. இவர் தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டில் அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்த அண்ணாமலைக்கு குறுகிய காலத்திலேயே மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
மேலும் மாநிலத்தை ஆளும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் அவர் திமுக பைல்ஸ் என்ற பெயரில் அக்கட்சியின் பிரமுகர்களின் சொத்து மதிப்பு என பல விபரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் ஆளும் கட்சியை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
அதன்படி வரும் 28ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளதாக கூறப்படும் ராமநாதபுரத்தில் இருந்து அண்ணாமலை இந்த பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார்.
இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாகம், ராஜஸ்தானில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
மேலும் ராஜஸ்தானில் ஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்த மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. பாஜகவுக்கு மொத்தம் 73 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அங்கிருந்து அண்ணாமலை ராஜ்யசபா எம்பியாக தேர்வாக இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இது அண்ணாமலையின் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
மேலும் அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதன் மூலம் தமிழக மக்களின் மனதை கவர முடியும் என பாஜக நம்புகிறது. தமிழகத்தில் பாஜக தலைவர்களாக இருந்த இல கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாஜி தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ராஜ்யசபா எம்பியாக இருப்பதோடு மத்திய இணையமைச்சராகவும் உள்ளார். அந்த வரிசையில் அண்ணாமலைக்கும் ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதன் மூலம் தமிழக வாக்காளர்களின் மனதை கவரலாம் என பாஜக கணக்கீட்டுள்ளதாக தகவல்கள் உலவுகின்றன.
ஆனால் இதுபற்றி இன்னும் எந்த பாஜக தலைவர்களும் கருத்து எதுவும் கூறவில்லை. அதோடு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் எந்த ராஜ்யசபா எம்பி பதவியும் காலியாகவில்லை. அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி தான் ஒரு ராஜ்யசபா எம்பி இடம் காலியாகிறது. அன்றைய தினம் முன்னாள் பிரதமரும் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ள மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
இதனால் ராஜஸ்தானில் ராஜ்யசபா தேர்தல் நடக்க சுமார் 10 மாதங்கள் வரை ஆகும். இதனால் அண்ணாமலை ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்பி பதவிக்கு தேர்வாக இருக்கிறார் என்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. மேலும் ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடக்கும் பட்சத்திலும் இன்னும் 10 மாதத்தில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏனென்றால் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தலே வந்துவிடும். மேலும் ராஜஸ்தானை பொறுத்தமட்டில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் வேற நடைபெற உள்ளது. இதனால் அதில் எந்த கட்சி எவ்வளவு சீட் பிடிக்கின்றன என்பதும் முக்கியமாகும். ஏனென்றால் ராஜ்யசபா எம்பிக்களை ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து எம்எல்ஏக்கள் தான் தேர்வு செய்கின்றன. இதனால் ராஜஸ்தானில் இருந்து விரைவில் ராஜ்யசபா எம்பியாக அண்ணாமலை தேர்வாக இருக்கிறார் என்ற தகவலின் உண்மை நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications