ரூ. 1.4 கோடி மோசடி.. பாஜக மாநில விவசாய அணி துணை தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது! சொகுசு கார்கள் பறிமுதல்
சென்னை: கடன் பெற்றுத் தருவதாகச் சொல்லி சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த பாஜக மாநில நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரிந்தர் பால் சிங். இவர் சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபர புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதாவது சிங் தொழில் வளர்ச்சிக்காகச் சிங்கப்பூர் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 70 கோடி கடனாகப் பெற்றுத் தருவதாகக் கூறி தன்னை சிலர் ஏமாற்றியதாகப் புகார் அளித்திருந்தார்.
பாஜக நிர்வாகி கைது: இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் சிவகங்கைச் சேர்ந்த ராஜசேகர் (65) என்பவரை இப்போது மத்திய குற்றப்பிரிவு மோசடி மற்றும் ஆவணங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் ஆவார்.
இவருடன் சேர்ந்து மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆலப்பாக்கம் சேர்ந்த ரஜிதா மெர்னல்சன் என்கிற ரேஷ்மின் (36), ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ராமு(37), போரூரைச் சேர்ந்த தசரதன்(30) என மொத்தம் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேர்ந்து தான் ஹரிந்தர் பால் சிங்கிடம் சிங்கப்பூர் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 70 கோடி கடன் வாங்கி தருவதாகக் கூறி 1.40 கோடி மோசடி செய்துள்ளனர்.
சொகுசு கார்கள் பறிமுதல்: கைது செய்யப்பட்டோரிடம் இருந்து போலீசார் 1.10 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு அதிநவீன பார்ச்சுனர் காரையும் போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பாஜக மாநில நிர்வாகி ராஜசேகர் மீது வேலை வாங்கி தருவதாக மோசடி, கடன் மோசடி, கட்டப்பஞ்சாயத்து என மொத்தம் ஏழு வழக்குகள் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
பாஜகவில் சேரும் முன்பு ராஜசேகர் , வேறு கட்சிகளிலும் இருந்துள்ளார். மேலும், சில தேர்தல்களிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2022இல் பாஜகவில் இணைந்து நிலையில், அதன் பிறகே இந்த மோசடியைச் செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications