புதிய டிவி சேனலை தொடங்கும் பாஜக! தமிழ்நாட்டிற்கு வரும் "ஜனம்" டிவி.. பாஜக போடும் பிளான் என்ன
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக காலூன்றத் தீவிரமாக முயன்று வரும் சூழலில், கட்சியின் சாதனைகள், கொள்கைகளை விளக்கும் வகையில் பாஜக தனியாக ஒரு சேனலை தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய பாஜக 4 இடங்களில் வென்றது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபையில் பாஜக இடம் பிடித்துள்ளது. இதையடுத்து கட்சியைத் தமிழ்நாட்டில் மேலும் வலுப்படுத்த பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்கு அடுத்த ஒரு முக்கிய நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான்.. அண்ணாமலை
அரசியல் கட்சிகள்
இப்போது அரசியல் களத்தில் சமூக வலைத்தளங்கள் எனப்படும் சோஷியல் மீடியா இல்லாமல் எந்த கட்சியும் இயங்குவதில்லை. சோஷியல் மீடியாலால் நேரடியாகத் தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும், அதில் உருவாக்கப்படும் இமேஜ் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சோஷியல் மீடியாக்கள் மூலம் உருவாக்கப்படும் இமேஜ் தேர்தல்களிலும் மறைமுகமாகத் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. இதனால் அனைத்து கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.
டிவி சேனல்
அதேபோல சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் டிவி சேனல்களும் முக்கியமானதாகவே உள்ளது. தங்கள் கட்சி மற்றும் தலைவர்கள் சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல டிவி சேனல்கள் பெரியளவில் உதவுகின்றனர். அதேபோல கட்சியின் இமேஜை பூஸ்ட் செய்யவும்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும் கட்சியின் டிவி சேனல்கள் முக்கிய பங்கு ஆற்றுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் தங்களுக்கு என ஒரு செய்தி நிறுவனத்தைக் கையில் வைத்துள்ளன.
பாஜக
திமுக, அதிமுக தொடங்கி சின்ன சின்ன கட்சிகள் வரை அனைத்தும் தங்களுக்கென தனியாக சேனல்களை வைத்துள்ளன. இதுபோன்ற டிவி சேனல்கள் மக்களிடையே தேர்தல் சமயங்களில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். பிரதான கட்சிகளில் பாஜகவுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் நேரடியாக எந்தவொரு சேனலும் இல்லாமல் இருந்தது.
புதிய சேனல்
இங்குள்ள பாஜக தலைவர்கள் பலரும் கட்சியின் சாதனைகள், கொள்கைகளை விளக்கும் வகையில் தனியாக ஒரு சேனல் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நீண்ட காலமாக பாஜகவினர் தனியாக டிவி சேனல் வேண்டும் எனக் கூறி வந்த நிலையில், இப்போது அது ஒரு வழியாக நடக்க உள்ளது. ஜனம் என்ற பெயரில் பாஜக பாஜக கட்சிக்கென தனி ஒரு டி.வி.சேனல் தொடங்கப்பட உள்ளது. இந்த சேனல் வரும் 23ஆம் தேதி முதல் தனது ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது.
பிளான் என்ன
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பக்கவாக சேனலை உருவாக்கிவிட வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். பாஜக குறித்த செய்திகள், பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல இந்தச் சேனல் பெரியளவில் உதவும் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடக்கும் நிலையில், பாஜக அதில் களமிறங்கினால் இந்த சேனல் அந்த பிரசாரத்திற்கும் உதவும்.