சிக்கலான ஜிஎஸ்டி வரி.. தமிழக நிதிநிலையை சரி செய்ய 3 ஆண்டுகள் ஆகும்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழக நிதிநிலையை சரி செய்ய 3 ஆண்டுகள் ஆகும் என்றும் ஓராண்டில் சரி செய்ய முடியாத அளவுக்கு பணிகள் மிக கடுமையாக உள்ளது என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல் டீசல் உயர்வுக்கான நிவாரணம் வழங்குவது என்பது ஒன்றிய அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி கடந்த அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் அமர்ந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் 2021- 2022 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்டது முதல் இ பட்ஜெட் ஆகும். 10 ஆண்டுகளுக்குப்பின் திமுக ஆட்சியில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை தாக்கல் செய்த முதல் பட்ஜெட். இந்த பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆற்றிய உரை:
கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக ஒன்றிய அரசின் வரிமுறை அமைந்துள்ளது. பெட்ரோல், டீசல் வரி உயர்வால் ஒன்றிய அரசுக்கு 69 சதவீதம் வருவாய் அதிகரிததுள்ளது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய அரசின் வரிமுறை அமைந்துள்ளது. பெட்ரோல் டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது. பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒன்றிய அரசின் கடமை; ஜி.எஸ்.டி. வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன.
நிதி நிலை சிக்கலை செய்து முடிக்க 2, 3 ஆண்டுகள் வரை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஒரே ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு பணி மிகக் கடுமையாக உள்ளது. பொது நிலங்களை முறையாக பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைக்கப்படும்.
ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி செம்மொழி தமிழ் விருது, ரூ 10 லட்சம் வழங்கப்படும். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ்ப் படைப்புகள் மொழி பெயர்க்கப்படும். அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும். தமிழ் வளர்ச்சித் துறைக்கு ₹80 கோடியும், தொல்லியல் துறைக்கு ₹29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 14,317 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறைக்கு ரூ 8930 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ₹500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும். கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ 9,370.11 கோடி ரூபாய் செலவில் கோவிட் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டன. நீதித் துறைக்கு 1713.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சொந்த கட்டிடங்கள் உறுதி செய்யப்படும். போக்குவரத்து ஆணையகரம் இனி போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு என பெயர் மாற்றம் செய்யப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 200 குளங்கள் சீரமைக்கப்படும். 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். மீன்வளத் துறைக்கு ரூ 1149 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகம் ஏற்படுத்தப்படும். வனப்பகுதிகளை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம் உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். ரூ500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்றை அமைக்கும். 79395 குக்கிராமங்களுக்ளில் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் திட்டத்தை செயல்படுத்த கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும் என்றார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
முன்னதாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும் அதிமுக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. பொய் வழக்குகளை போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம், பொய் வழக்குகளை கண்டு அதிமுக அஞ்சாது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications