முகம் மாறும் தலைநகரம்! வேகம் எடுக்கிறது சிங்கார சென்னை 2.0 பிளான்.. பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு!
சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சென்னைக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.

சிங்கார சென்னை 2.0
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

சென்னை திட்டம்
சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

தரைப்பாலம்
தரைப்பாலங்களை உயர்மட்ட மேம்பாலங்களாக மேம்படுத்த ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 5375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும். இதற்கு 135 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். மாமல்லபுரத்திற்கு பிறகு உள்ள சாலைகள் மொத்தமாக 6 வழியாக மாற்றப்படும்.

ஏற்கனவே பணிகள்
ஏற்கனவே முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிங்கார சென்னை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், சென்னை திருவான்மியூர், கொட்டிவாக்கம், நீலாங்கரையில் உள்ள ஈசிஆர் சாலை 135 கோடியில் 6 வழிச் சாலையாக மாற்றப்படும். தாம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த தலா 10 கோடி என 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு












Click it and Unblock the Notifications