மாற்றத்திற்கு தயாராகிறாரா முதல்வர்.. விஜயபாஸ்கர் பதவி பறி போகிறதா.. கோட்டையில் பரபரப்பு!
சென்னை: தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரப்போவதாக சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அமைச்சர்களின் பதவி நிச்சயம் இல்லாமல் இருந்தது. தனியாக உளவுத்துறை மூலம் பல தகவல்களை திரட்டி கொண்டே இருந்தார் ஜெயலலிதா.
ஊழல், தொகுதியில் அதிருப்தி என்ற புகார்களையுடைய அமைச்சர்களின் பதவியை பறித்து அவர்களை தூக்கி அடித்தார். இதனால் அமாவாசை, பவுர்ணமிகளில் யார் தலை உருளுமோ என்று அமைச்சர்கள் தூக்கமின்றி தவித்த இரவுகளும் உண்டு.

சிபிஐ ரெய்டு
ஆனால் இப்போ நிலைமை அப்படி இல்லை. தமிழக அமைச்சரவை 2 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அமைச்சர்களின் பொறுப்புகளில் எந்தவித திருத்தமும் செய்யப்படவில்லை. இதற்கு காரணம், முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஆதாரங்கள் சிக்கின
சிபிஐ விசாரணை மற்றும் வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்துள்ளன. அது சம்பந்தமாக அவர்கள் வழக்குகளை எதிர்கொண்டும் வருகிறார்கள். ஆனால் எல்லாரையும்விட அதிகமாக அதிருப்தியை சம்பாதித்துள்ளது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான். சம்பாதித்த சொத்துக்கள், ஆவணங்கள், என எல்லாவற்றையும் பறிமுதல் செய்து கையில் ஆதாரங்களை வைத்துள்ளது சிபிஐ.

கண்டன அறிக்கைகள்
இது சம்பந்தமாக சம்மன்கள் கோர்ட் மூலம் அனுப்பப்பட்டு உள்ளன. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்லி கண்டன அறிக்கைகள் ஓயும்வரை வெளியிட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.

முதல்வர் யோசனை
தேர்தல் நெருங்குகிறது. கூட்டணி சம்பந்தமான முடிவுகளை அதிமுக எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அப்பட்டமான ஊழல் புகார் உடைய விஜயபாஸ்கர் மற்றும் அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது ரெய்டுகள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதனால் முதல் வேலையாக விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கலாமா என்று முதல்வர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

டிடிவியுடன் இணைவாரா?
ஏற்கனவே சிபிஐ ரெய்டின்போது, விஜயபாஸ்கரின் பதவியை பறிப்பதாக முதல்வர் முடிவெடுத்ததாகவும், ஆனால் விஜயபாஸ்கர் முதல்வரின் வீட்டிற்கே சென்று விவாதம் செய்ததாகவும், பதவியை பறித்தால் டிடிவியுடன் இணைந்துவிடுவேன் என சொன்னதாகவும் வாய்ப்பிருப்பதாக செய்திகள் கூறப்பட்டன.

இழுபறி நிலை
இந்த நிலையில் விஜயபாஸ்கர் பதவியை பறித்து கட்சியின் மானத்தை ஓரளவாவது காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் யோசிக்கிறார். மறுபக்கம் அதன் விளைவுகளை எப்படி சமாளிப்பது என்றும் ஆலோசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இப்போதோ அப்போதோ என்று விஜய பாஸ்கரின் பதவி இழுபறியாக உள்ளது மட்டும் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications