தமிழ்நாடு அரசின் தகுதி இதுதான்.. பொருளாதாரக் குழுவை குறிப்பிட்டு மீண்டும் பாஜகவை சீண்டிய பிடிஆர்!
சென்னை: தமிழ்நாட்டிற்கு பொருளாதாரம் குறித்த அறிவுரைகள் கூற என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியதற்கான காரணம் குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் தேசிய அளவில் தொடங்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சியினர் இடையே எது இலவச திட்டம், எது சமூக நலத்திட்டம் என்று விவாதம் தொடங்கியுள்ளது. இலவசங்கள் தொடர்பான விவாதங்களும், அரசியல் கட்சியினரின் கருத்துகளும் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஒவ்வொரு நடவடிக்கையும் தேசிய அளவில் விவாதமாக மாறி வருகிறது. மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் செருப்பு வீசியதற்கு, பிடிஆர் ஆற்றிய எதிர்வினையும், இலவசங்கள் குறித்த விவாதத்தில் மத்திய அரசு மீது வைத்த விமர்சனங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்!
பிடிஆர் விவாதம்
ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசுகையில், நான் ஏன் மற்றவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்? என் முதலமைச்சர் எனக்கு ஒரு பணியினை கொடுத்தார். அதை நான் செவ்வனே செய்துகொண்டிருக்கிறேன். மத்திய அரசையே மிஞ்சும் அளவிற்கு என் செயல்பாடுகள் உள்ளது. மத்திய அரசின் கருவூலத்திற்கு தமிழகம் அதிக அளவில் நிதியளிக்கிறது. ஒரு ரூபாய் நாம் கொடுத்தால், 33 அல்லது 35 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறோம்.
என்ன தகுதி?
அதற்கு மேல் எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எதன் அடிப்படையில் உங்களுக்காக என் கொள்கையை மாற்றிக்கொள்ள சொல்கிறீர்கள்? அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆலோசனை கூறுகிறீர்களா அல்லது பொருளாதாரத்தில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளீர்களா? அல்லது நோபல் பரிசு பெற்றுள்ளீர்களா?
ஏன் அறிவுரை?
எங்களை விட நீங்கள் தகுதியானவர்கள் என்று சொல்வதற்கு ஏதேனும் உங்களிடத்தில் இருக்கவேண்டும் அல்லவா? அல்லது பொருளாதாரத்தை சிறப்பாக முன்னேற்றியுள்ளீர்கள் என்பதற்கான, கடன்களை குறைத்துள்ளீர்கள் என்பதற்கான, தனி நபர் வருமானத்தை அதிகரித்ததற்கான, வேலை வாய்ப்புகளை உருவாக்கியதற்கான முயற்சிகளை எடுத்தீர்கள் என்பதற்கான ஆதாரம் உங்களிடத்தில் இருந்தால் நிரூபித்து விட்டு பின்னர் எங்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு தேசிய அளவில், தமிழக அளவிலும் பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். மத்திய அரசின் பொருளாதாரத்துடன், மாநில அரசின் பொருளாதாரத்தை எப்படி ஒப்பீடு செய்யலாம் என்று பாஜக சார்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதிலும் பொருளாதாரத்தில் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளீர்களா என்று கேள்விக்கு கடுமையாக பதிலளித்து வருகின்றனர்.
பிடிஆர் ட்வீட்
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு பொருளாதாரம் குறித்த அறிவுரைகள் கூற என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியதற்கான காரணம் குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்க சர்வதேச அளவில் 5 பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள்.
ஆலோசனைக் குழு
அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக பணியாற்றிய ரகுராம் ராஜன், இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகராக இருந்த எஸ். நாராயணன், பேராசிரியர் ஜான் த்ரே மற்றும் எஸ்தர் டஃப்லோ ஆகியோர் இருக்கிறார்கள். அனைவரும் சர்வதேச அளவில் மாபெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழக அரசுக்கு பொருளாதார ஆலோசனைகள் வழங்குவோரை மறைமுகமாக பழனிவேல் தியாஜராஜன் விமர்சித்துள்ளார்.