"தமிழ்நாடு- ஒரு டிரில்லியன் பொருளாதாரம்!" நனவாகுமா முதல்வர் ஸ்டாலின் கனவு! வல்லுநர்கள் சொல்வது என்ன
சென்னை: 2030க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற முதல்வரின் இலக்கை நினைவாக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதையே இலக்காக வைத்துச் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இதையடுத்து மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட ஐக்கிய அமீரகத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முதலீடு திட்டங்களை மேற்கொண்டார்.

ஒரே மணி நேரம்
அதேபோல முதலீடுகளை ஈர்கக் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே தைவான் காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூவின் தலைவரான டி.ஒய் சாங் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். முதலில் அவரது பயணத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், மாநில அரசு உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், டி.ஒய் சாங் மாநிலத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதை உணர்ந்து தமிழக அரசு உணர்ந்து கொண்டது. இதனால் அன்று மாலையே ஸ்டாலின் முன்னிலையில் ஒரு மணி நேரத்திற்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாட்டில் ஜிடிபி
2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் முதலமைச்சரின் லட்சிய இலக்கை நனவாக்கத் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதற்கென தனியாக ஒரு ஆலோசகரும் நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, மாநிலத்தின் பொருளாதாரம் சுமார் $290 பில்லியன் ஆகும். 2022-23 பட்ஜெட் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளபடி, 2021-22க்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) மதிப்பு ₹21,79,655 கோடி ஆக உள்ளது.

பிடிஆர்
இது தொடர்பாக மாநில நிதித்துறை அமைச்சர் பிடிஆர் கூறுகையில், "2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஒரு ஆண்டிற்கு 13-13.5% வளர்ச்சி தேவைப்படும். முதல் ஆண்டில் நமது மாநிலத்தில் வளர்ச்சி 14.5%ஆக உள்ளது. நமக்குச் சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சி 14%ஆக இருக்கும் எனக் கணித்துள்ளோம். இலக்கை அடைவதில் இந்த முதல் ஆண்டுகள் மிக முக்கியம் என்பதால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்" என்றார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்
"வரும் ஆண்டுகளில் வளர்ச்சி 12% ஆக இருந்தால் கூட மாநில பொருளாதாரம் $700 பில்லியன் - $750 பில்லியனை எளிதில் தொடும் என்றும் இதற்கு ஏற்றார் போல அரசு விரைவாகக் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் யுனிவர்சிட்டியின் துணைவேந்தர் என்.ஆர். பானுமூர்த்தி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பல்வேறு தொழில்கள்
தமிழக அரசின் தற்போதைய முன்னுரிமைகள் குறித்து, முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, மின் வாகனங்கள், தோல் அல்லாத காலணிகள், ஃபின்டெக், ஜவுளி, பாதுகாப்பு உற்பத்தி ஆகியவற்றுக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். ஐடி மற்றும் ஐடி தொடர்பான தொழில்களை 2 மற்றும் 3 கட்ட நகரங்களுக்கு எடுத்துச் செல்வதைத் தவிர, திருப்பூர் போன்ற ஜவுளி மையத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். மேலும், உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கும் அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

ஜவளித்துறை மாற்றங்கள்
குறிப்பாக ஜவுளித் துறையில் நடக்கும் மாற்றங்களை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. முதல்வரின் சமீபத்திய ஐக்கிய அமீரக பயணத்தின் போதும், வட தமிழகத்தில் ஆடைத் தயாரிப்புப் பிரிவை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல தமிழ்நாட்டில் தோல் துறையின் தொழிற்சாலைகள் குறைவாக உள்ள நிலையில், அதை அதிகப்படுத்தவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

10 இல்லை 13 ஆண்டுகள்
தமிழக அரசு இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், இலக்கை அடையப் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பாக மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இயக்குநர் கே.ஆர். சண்முகம் கூறுகையில், "$1 டிரில்லியன் பொருளாதாரம் என்பது சாத்தியமான ஒன்று தான். 10 ஆண்டுகளில் முடியாவிட்டாலும் 13 ஆண்டுகளில் நம்மால் இந்த இலக்கை அடைந்துவிட முடியும்" என்றார்.

அரசின் இலக்கு
குறிப்பாகச் சேவைத் துறைக்கு அரசு அதிகபட்ச முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தின் பலம் இங்குத் தொழில் தொடங்க இருக்கும் குறைவான தடைகள். இது பல்வேறு தொழில்களை ஈர்க்கவும் செய்கிறது. தமிழக அரசு வரும் காலத்தில் அதன் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு. அனைவருக்கும் வளர்ச்சி என்பதில் இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்தாலும், பொருளாதார வளர்ச்சியைக் கைவிட்டுவிடக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications