அம்மா கோவிட்-19 திட்டம் : ரூ. 2500 கட்டுங்க... பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி வீடு தேடி வரும்
இந்தியாவிலேயே முதன்முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இத்திட்டத்தில் இணைய 2500 கட்டணம் செலுத்த வேண்டும்.
உலகம் முழுவதும் இரண்டு கோடி பேர் கொரோனா தொற்று ஆளாகியுள்ளனர். இந்தியாவில் 25 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 3 லட்சம் பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் குணமடைந்திருந்தாலும் ஏராளமானோர் வீட்டுத்தனிமையில் இருக்கின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்காக அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்கும் நபர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் தமிழக அரசு வழங்க உள்ளது.

அம்மா கோவிட் 19 சிறப்பு திட்டம்
இதற்காக அம்மா கோவிட் 19 என்ற திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுடன் மருத்துவக் குழு தொடர் கண்காணிப்பில் இருக்கும் என்றும், கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இத்திட்டத்தில் இணைய 2500 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன கிடைக்கும்
இந்த திட்டத்தின் மூலம் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி, முகக்கவசங்கள், வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுவதோடு, காணொலி காட்சி மூலமாக மருத்துவர்கள் ஆலோசனையும் வழங்க உள்ளனர்.

சிறப்பம்சம் என்னென்ன
வீட்டுத்தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு மன நல ஆலோசகர்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களும் ஆலோசனை வழங்குவர் என்றும், அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகம் முழுவதும்
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 சதவிகிதம் பேர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் இல்லத்திற்கே சென்று சிகிச்சை வழங்குவதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சென்னையில் தொடங்கி விரைவில் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது. இது தவிர கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டு குணமாகி வீடு திரும்பியுள்ள லட்சக்கணக்கானவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து சொல்லும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications