இந்த பக்கம் ஆளுநர்.. அந்த பக்கம் அமலாக்கத்துறை! தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் ஸ்டாலின்
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான மோதல்போக்கு, தமிழ்நாடு அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனை போன்றவை தொடர்பாக விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுகிறது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம், அலுவலகம், தலைமைச் செயலக அறை உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனையை தொடர்ந்து நேற்று முந்தினம் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

நேற்று 2 வது நாளாக அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மறுபக்கம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளின் காரணமாக தமிழ்நாடு அரசு கடும் அதிருப்தியில் இருக்கிறது. அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கால் பல்வேறு முக்கிய மசோதாக்கள் கிடப்பில் உள்ளன.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மறுபக்கம் தொடங்கி வேகமெடுத்து இருக்கும் நிலையில், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசிக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். ஜூலை 22 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான மோதல், அமலாக்கத்துறை சோதனைகள், 2024 நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications