இன மோதலால் எரியும் மணிப்பூர்.. தமிழர்களை மீட்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: இனவன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இனமோதல்களால் பற்றி எரிகிறது மணிப்பூர். மைத்தேயி இனக்குழுவினருக்கு எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற உத்தரவு. இதனை அமல்படுத்த மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்தது.

ஆனால் எஸ்டி பட்டியலில் உள்ள நாகா, குக்கி இன மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மைத்தேயி இன மக்களை எஸ்டி பட்டியலில் சேர்த்தால் தங்களது அடிப்படை உரிமைகள், நில உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்பது நாகா, குக்கி இனமக்களின் குரல். இதனை முன்வைத்து நடந்த போராட்டங்கள் வரலாறு காணாத பெரும் வன்முறையாக வெடித்தது.
மணிப்பூரில் தற்போது வரை ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த நிலத்தில் அகதிகளாக தவிக்கின்றனர். மணிப்பூரில் வாழும் பிற மாநிலத்தவர் இந்த மோதலில் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக மணிப்பூரின் மோரே நகரம் மற்றும் பணிகளுக்காக இம்பால் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இம்பால்- கொல்கத்தா, இம்பால்- கவுகாத்தி இடையேயான விமான சேவைகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த விமான பயணத்துக்கான கட்டணம் வழக்கத்தை விட 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இம்பாலில் இருந்து கொல்கத்தா வர ரூ30,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இம்பால் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
மணிப்பூரில் சிக்கி இருக்கும் தங்களது மாநிலத்தவரை மீட்க தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது. மணிப்பூரில் சிக்கி இருக்கும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்புவதற்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்த 5 தமிழ்நாட்டு தமிழர்களை தமிழ்நாடு அரசு இன்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவர உள்ளது. இதேபோல தமிழர்கள் உதவி கோரும் நிலையில் முழு வீச்சில் தமிழ்நாடு அரசு செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications