இட ஒதுக்கீட்டில் 50% உச்ச வரம்பை நீக்குங்கள்.. முழங்கிய ஜோதிமணி.. போன்போட்டு பாராட்டிய முதல்வர்
சென்னை: பாஜகவையும் பொய்களையும் பிரிக்க முடியாது என மக்களவையில் பேசிய எம்பி ஜோதிமணி, அகில இந்தியா அளவில் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்குத் தமிழ்நாடு எடுத்த முயற்சியே காரணம் என்றார். அவரது பேச்சைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசியில் அழைத்து ஜோதிமணியை வாழ்த்தியுள்ளார்.
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை காரணமாக மக்களவையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கியுள்ளது.
இந்நிலையில் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான பட்டியலை மாநிலங்களே முடிவு செய்துகொள்ள அனுமதிக்கும் புதிய மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

ஜோதிமணி எம்பி பேச்சு
இந்த மசோதா பற்றிய விவாதத்தில் பேசிய கரூர் எம்பி ஜோதிமணி, "இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் உரிமைகளை உறுதி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை வரவேற்கிறோம். அதேநேரத்தில் சில வரலாற்று உண்மைகளை நாம் மறந்து விடக்கூடாது. பாஜகவையும் நரேந்திர மோடியையும் பிற்படுத்தப்பட்ட மக்களைக் காக்க வந்த யட்சர்களை போல நீங்கள் பறை சாற்றுகிறீர்கள்.

போராட்டம் நடத்தியது யார்
மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது, இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், விளக்குமாற்றோடு வீதியில் வேலை செய்ய வேண்டியவர்கள் எல்லாம் படித்து பட்டம் பெற்று அதிகாரத்தை அலங்கரித்துவிடுவார்கள் என்று அவதூறு செய்தது யார்? விளக்குமாற்றோடு வீதியில் ஊர்வலம் போனது யார்? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக விபி சிங் அரசை கவிழ்த்தது யார்? அப்போது அப்படிச் செய்துவிட்டு இப்போது சமூக நிதி குறித்துப் பேசலாமா?

தமிழ்நாடே பெற்றுத் தந்துள்ளது
ஒன்றிய அமைச்சர் இந்த மசோதாவை தாக்கல் செய்த போது, மருத்துவ படிப்புகளில் சுமார் 4000 இடங்கள் பிரதமர் மோடியின் தயவில் ஓபிசி மாணவர்கள் பெற்றது போல ஒரு சித்திரத்தை முன் வைத்தார். ஆனால், அது குறித்த உண்மையைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தியாவின் முதல் அரசியல் சாசன சட்டத் திருத்தம் பெரியார், காமராஜர், நீங்கள் தினந்தோறும் வெறுக்கும் நவீன இந்தியாவின் சிற்பி நேரு ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. அன்று தொடங்கி தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீடு கொள்கையை நாங்கள் காலங்காலமாக நிலை நிறுத்தி வருகிறோம். அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே மருத்துவ கல்வியில் ஓபிசி மாணவர்களான 27% இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்த நாட்டிற்குத் தமிழ்நாடே போராடிப் பெற்றுத் தந்துள்ளது.

பொய்களையும் பாஜகவையும் பிரிக்க முடியாது
ஆனால், இதைப் பிரதமர் மோடியின் சாதனையைப் போல வழக்கம் போலச் சித்தரித்து நீங்கள் பறைசாற்றுகிறீர்கள். பொய்களையும் பாஜகவையும் பிரிக்க முடியாது. அதற்கான காரணத்தையும் சொல்கிறேன் கேளுங்கள். உச்ச நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தான் பிராமண பத்திரம் தாக்கல் செய்தது அனைவருக்கும் தெரியும், இந்திரா சகானி வழக்கைக் காரணம் காட்டி எத்தனை ஆண்டுகள் ஓபிசி மக்களுக்கு நீங்கள் அநீதி விளைத்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

மாற்றவில்லை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, திமுக சிபிஎம் மற்றும் இதர அரசியல், சமூக இயங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாகவே சென்னை உயர் நீதிமன்றம், மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவ சேர்க்கைக்கான இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதி செய்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. அதன் பின்னும் பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

50% உச்ச வரம்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பின்னரே வேறுவழியின்றி இதற்கு ஒப்புக் கொண்டீர்கள். தமிழ்நாடு அரசின் சமரசமற்ற போராட்டத்தின் விளைவாகவே ஓபிசி இட ஒதுக்கீடு இன்று சாத்தியமாகியுள்ளது. அதிலும்கூட 69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றும் தமிழ்நாட்டிற்கு 23% அநீதியே இழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளிலும் ஒன்றிய அரசு தெளிவான பதிலைக் கூறாமல் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு தீர்பையே காரணம் காட்டி வருகிறது.

உண்மையாக இருக்க முயலுங்கள்
பொருளாதாரத்தில் பின்பற்றியவர்களுக்கு 10 இட ஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசே இந்த உச்ச வரம்பை மீறியுள்ள போது, மாநில அரசுகள் ஏன் 50% விடக் கூடுதலாக இட ஒதுக்கீட்டை வழங்கக் கூடாது? 50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்கும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவைக் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இந்த அரசு ஓபிசி பிரிவுக்கும் சமூக நீதிக்கும் ஆதரவாக உள்ளது என்ற பிம்பத்தை உங்களால் ஏற்படுத்த முடியும். சமூக நீதிக்கான போராட்டத்தில் தமிழ்நாடு தான் ஒட்டுமொத்த தேசத்திற்கும் வழிகாட்டுகிறது. நாட்டிற்கு ஒருமுறையாவது உண்மையாக இருக்க முயலுங்கள். இல்லையென்றால் சமூக நீதிக்கான சமரசமற்ற போராட்டத்தில் தமிழ்நாடு என்றும் உங்களைப் பணிய வைக்கும். இப்போதும் அது தான் நடந்தது இதற்கு பிறகும் அது தான் நடக்கும்" என்று பேசினார்,

முதல்வர் பாராட்டு
காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் இந்த பேச்சைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே மக்களவையில் ஜோதிமணி எம்பியின் பேச்சைக் கேட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "சற்று முன்பு தமிழக முதலமைச்சர் இல்லத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு. அண்ணன் ஸ்டாலின் நாடாளுமன்றத்தில் நேற்றைய எனது பேச்சைப் பாராட்டினார்கள். அவரது கடினமான பணிச்சுமைக்கும், சிறப்பான அரசு நிர்வாகத்திற்கும் மத்தியில் இந்த பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது. எனது மனமார்ந்த நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications