"வாரிசு அரசியலில் எந்த தப்பும் இல்லை.. கண்ணபிரானை போல அவதரிக்கும் ராகுல்!" சொல்கிறார் கே.எஸ்.அழகிரி
சென்னை: ராகுல் காந்தியின் நாடு தழுவிய நடைப்பயணம் குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்த கே.எஸ் அழகிரி, பாஜகவையும் கடுமையாகச் சாடி பேசினார்.
Recommended Video
அடுத்த மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு தான் நடைபெற உள்ளது என்றாலும் கூட, அதற்கான நடவடிக்கைகளை பாஜக ஏற்கனவே மெல்லத் தொடங்கிவிட்டது.
மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டே முக்கிய முடிவுகளை எடுக்கிறது. காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் மக்கள் ஆதரவைத் திரட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

ராகுல் காந்தி
மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸின் ராகுல் காந்தி நாடு முழுக்க நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக வரும் செப்.7ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் தனது நடைப்பயணத்தைத் தொடங்குகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கும் இந்த நடைப்பயணம் காங்கிரசுக்கு எழுச்சி தரும் என அக்கட்சியினர் பெரிதும் நம்புகின்றனர்.

கே.எஸ்.அழகிரி
இந்தச் சூழலில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ராகுல் காந்தியின் நாடு தழுவிய பயணம் உள்ளிட்ட பல விகாரங்கள் குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "செப்.7ஆம் தேதி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ஆசி பெற்றுவிட்டு ராகுல் காந்தி இந்த நாடு தழுவிய நடைப்பயணத்தைத் தொடங்குவார்.

கண்ண பிரான்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடர்ச்சியாக 149 நாட்கள் சுமார் 3600 கி.மீ தொலைவிற்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்கிறார். அதர்மம் அதிகரிக்கும்போது, நீதியை நிலைநாட்டக் கண்ண பிரான் எப்படி இந்த பூமியில் அவதரித்தாரோ, அதேபோல அரசியலில் புதிய அவதாரம் எடுத்து ராகுல் காந்தி பயணிக்க உள்ளார்" என்றார்.

வாரிசு அரசியல்
தொடர்ந்து வாரிசு அரசியல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, "மருத்துவர் மகன் மருத்துவர் ஆவார். பொறியாளர் மகன் பொறியாளர் ஆவார். அதேபோலத் தான் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் அரசியலுக்குத் தான் வருவார்கள். இப்படிப் பார்க்கும் போது அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்குத் தான் வர வேண்டும். அதில் எந்த தவறும் இல்லை.

பாஜக
பாஜகவினர் இப்போது வந்து தேசப்பற்று குறித்ததெல்லாம் பேசுகிறார்கள். ஆங்கிலேயர்களிடம் இந்தியா அடிமைப்பட்டு இருந்த போது, மக்களிடையே விடுதலை குறித்த எண்ணத்தை ஏற்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் எந்த ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தாலும் பாதியில் விடுவதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அதில் உண்மையில்லை. ஆழ்ந்த சிந்தனை மற்றும் பொறுப்புணர்ச்சியோடு தான் நடவடிக்கை எடுக்கிறோம்.

இலவசங்கள்
அனைத்து இலவசத் திட்டங்களும் தவறு எனப் பிரதமர் மோடி கூறுவது மிகவும் தவறு. விவசாயம் போன்ற துறைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை வெறும் இலவசமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும் ஒரு வகையான முதலீடுதான். மத்திய மாநில அரசுகள் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றுக்கு அதிகமாக செலவழிக்க வேண்டும். அது அத்தியாவசியமான ஒன்று" என்றார்












Click it and Unblock the Notifications