சட்டசபைக்கு கறுப்புச் சட்டையுடன் வந்த காங்கிரஸ்.. இரவிலும் போராட்டம் தொடரும்.. செல்வப்பெருந்தகை!
சென்னை: ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இன்று கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். அதேபோல் ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிராக கைகளில் பதாகை ஏந்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சட்டசபைக்கு வந்துள்ளனர். அதேபோல் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையானது.
மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாக கூறி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

2 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில், ராகுல் காந்தி மீதான அவதூறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உத்தரவிட்டார். இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ராகுல் காந்தி தகுதிநீக்கம்
அத்துடன், குற்ற வழக்கில் மக்கள் பிரதிநிதி ஒருவர் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தண்டிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது பதவி பறிக்கப்படும் என்பதால், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. பின்னர் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

காங்கிரஸ் போராட்டம்
இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு முக்கியப் பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் சட்டசபையில் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம்
இதுகுறித்து அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபை நிகழ்வில் பங்கேற்க வேண்டும். ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டசபையின் வேலை நேரத்தில் பேசவேண்டும். சட்டசபையை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

செல்வப்பெருந்தகை பேட்டி
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். அதேபோல் ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிரான பதாகைகளுடனும் வந்து செய்தியாளர்களை சந்தித்து செல்வப்பெருந்தகை கூறுகையில், தடையாணை வாங்கி இருந்த வழக்கை எடுத்து நடத்தி, 24 நாட்களுக்குள் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்று எங்கும் காணாத தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலை.

கண்டன தீர்மானம்
இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கு போட்டவரே தடை வாங்குகிறார். தீர்ப்பு வந்து 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்திருக்கிறார்கள். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்காக தொடர்ந்து போராடுவோம். சட்டசபையில் கண்டன தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி இருக்கிறோம். இது முழுக்க முழுக்க பாஜக, நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications