10% இடஒதுக்கீடு.. தமிழக காங்கிரஸ் ”பல்டி”.. முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்திற்கு செல்வபெருந்தகை ஆதரவு!
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்த நிலையில், தமிழக காங்கிரஸ் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை ஆதரவு அளித்துள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அளித்தது. இதற்கு தமிழக அளவில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாஜக, அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
தினம் ரூ.2,200 சம்பாதிப்பவர் ஏழையா? பொருளாதார இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது- ஸ்டாலின் ஆவேசம்
அனைத்து கட்சி கூட்டம்
இதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.
சமூகநீதிக்கு ஆபத்து
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. இட ஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த 10% இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள் சமூகநீதி கொள்கைக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டம்
பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. சமூக கல்வி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சரியானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 340வது பிரிவில் சமூக, கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பதே வரையறை. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார ரீதியாக என்ற அளவுகோலை புகுத்த மத்திய அரசு நினைக்கிறது என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆதரவு
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை ஆதரவு தெரிவித்தார். இந்த தீர்மானத்தை ஆதரித்து செல்வபெருந்தகை பேசுகையில், தேசிய அளவில் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டம் வேறு. ஆனால் சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாட்டில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. முறையான கணக்கெடுப்பு, வரன்முறைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
தமிழக காங்கிரஸின் மாற்றம்
அதனால் இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம். சமூகநீதி கண்ணோட்டத்தில் இதனை அணுக வேண்டும். தேசிய அளவில் இந்த விவகாரத்தில் வேறாக இருந்தாலும், சமூகநீதியின் தொட்டிலாக இருக்கும் தமிழகத்தில் எங்கள் கருத்து மாறுபடுகிறது என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உயர்சாதி ஏழைகளுக்கான 10 இடஒதுக்கீடு விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.